சென்னை : மோடி 2.0 அரசின் முதல் நூறு நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன் அதன் தொகுப்பையும் இன்று சென்னையில் வெளியிட்டார்.
குறிப்பாக காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்தை கொடுத்து வந்த 370 பிரிவை நீக்கியது, இதனால் இனி காஷ்மீரில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
சிறிய வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுவதால், இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி மேம்படும் என்றும், இது 5 டிரில்லியன் டாலர் இலக்குக்கு பெரிதும் பயன்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர முத்தலாக் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் அனைவருக்கும் 2022க்குள் அனைவருக்கும், மின்சாரம், குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், இதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் அவர்களது வீட்டின் அருகிலாவது, தண்ணீர் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இதுவரை 41 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்று உள்ளனர் என்றும், மேலும் 16,000 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார், இந்த திட்டத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழைகள் உயர்தர சிகிச்சையை பெறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 3 தவணையாக மொத்தம் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுவரை அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும், மேலும் சந்திரயான் 2 திட்டத்தில் 99.9% வெற்றி கிடைத்துள்ளது. ஆக இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து, தனது ஆதரவை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர வேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து, முத்ரா திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் இது குறித்தான அறிக்கை, இதன் மூலம் எத்துணை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.