ஜியோ பெயரை எடுத்தாலே சில நிறுவனங்களுக்குக் கோபம் வரும் அளவிற்குப் பிற நிறுவனங்களின் வர்த்தகத்தை ஜியோ சூறையாடியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி ஜியோ தனது புதிய பிராண்ட்பேன்ட் திட்டத்தை மக்களின் சேவைக்காக அறிமுகம் செய்தது.
சுமார் ஒரு வாரக் காலத்திற்கு எங்குத் திரும்பினாலும் ஜியோ ஜியோ என்று பேசும் அளவிற்கு ஜியோவின் பிராண்ட்பேன்ட் திட்டம் இருக்கிறது எனப் போற்றப்பட்டது. ஆனால் உண்மை என்ன..?
ஜியோ பிராண்ட்பேன்ட்
இலவச லோக்கல் வாய்ஸ் கால், இந்தியாவில் கிடைக்கும் சராசரி இண்டர்நெட் வேகத்தை விடவும் 4 மடங்கு அதிக வேகம் போன்றவற்றையும், சில இலவசங்களையும் சேர்ந்து ஜியோ தனது பிராண்ட்பேன்ட் திட்டத்தை அறிவித்தது.
699 ரூபாயில் துவங்கி 8499 ரூபாய் வரையிலான மாத கட்டணங்களில் 100 Mbps முதல் 1Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவை அளிக்க உள்ளதாக ஜியோ அறிவித்தது.
சந்தை விலை
கிரிசில் ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் படி இந்தியாவில் பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் ஒரு ஜிபி டேட்டாவை 4 ரூபாய்க்குக் கொடுக்கிறது. இது அடிப்படை திட்டத்தில் கிடைக்கும் இண்டர்நெட்-க்கான விலை.
இதுவே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் 2 ரூபாய்க்குத் தருகிறது.
ஜியோ அளிக்கும் பிரீமியம் சேவையில் ஒரு ஜிபி டேட்டா 1.2 முதல் 1.6 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இது பெரிய அளவில் வித்தியாசம் ஒன்று இல்லை.
முன்பணம்
ஜியோவின் பிராண்ட்பேன்ட் சேவை பெற முதலில் நாம் 2500 ரூபாய் முன் பணம் செலுத்த வேண்டும், இது திரும்பக் கிடைக்கும் என்றாலும் சாமானிய மக்களுக்கு இதில் பெரிய அளவில் விருப்பம் இல்லை.
முன் பணம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் ஜியோ பிராண்ட்பேன்ட் சேவையை வாங்கத் தயங்குகின்றனர்.
தேவையில்லாத சேவை
தற்போது ஜியோ பிராண்ட்பேன்ட் சேவை உடன் கிடைக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஹோம் செக்யூரிட்டி, கன்டென்ட் ஷேரிங், டிவைஸ் செக்யூரிட்டி போன்ற நவீன சேவைகள் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர தவறியுள்ளது.
அதேபோல் ஸ்மார்ட் ஹோம் சேவையும் சாமானிய மக்களால் இன்றைய வாழ்க்கை முறையில் பயன்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. ஆகையால் இதுவும் தேவையற்ற சேவையாகவே உள்ளது.
அடிப்படைத் தேவை
இந்திய மக்களின் இன்றைய பயன்பாட்டுத் தேவைக்கு 50 முதல் 200Mbps வேகம் கொண்ட இண்டர்நெட் இருந்தாலே போதும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜியோவின் 1Gbps வேகமும் தேவையற்றதாக இருக்கிறது.
இப்படிப் பல தேவையற்ற விஷயங்களை மக்கள் மீது திணிப்பதன் மூலம் ஜியோ திட்டம் மக்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்ற சொல்ல வேண்டும்.
இதனால் ஜியோ டெலிகாம் சேவை போல் ஜியோ பிராண்ட்பேன்ட் இல்லை, இத்திட்டத்தால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை, எந்தப் பெரிய மாற்றமும் நடக்கப்போவது இல்லை என்பது தான் தற்போதைய நிலை.