பல பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் மற்றும், தொழில்நுட்ப துறையின் முன்னோடிகளில் ஒருவரான எலோன் மஸ்க் டெஸ்லா என்கிற நிறுவனம் மூலமாக மின்சார வாகனங்களைத் தயாரித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் கூறுகையில், இந்த காலாண்டில் குறைந்தது 100,000 மின்சார வாகனங்களையாவது உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
கடந்த காலாண்டில் மட்டும் 95,200 வாகனங்களை உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறார்களாம். இது கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் உற்பத்தி செய்த வாகனங்களை விட அதிகம். ஆக கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு தொடங்கி ஒவ்வொரு காலாண்டும் தங்கள் பழைய உற்பத்தி எண்ணிக்கை சாதனைகளை உடைத்துக் கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க், தன் டெஸ்லா நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் புதிய சாதனை, எட்டக் கூடிய தொலைவில் தான் இருப்பதாக, நேற்று (செப்டம்பர் 26, 2019 வியாழக்கிழமை) அன்று சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறாராம்.
"முதல் முறையாக ஒரு காலாண்டில் 1,00,000 வாகனங்களை டெலிவரி செய்ய இருக்கிறோம். இது எங்கள் நிறுவனத்திற்கு நம்ப முடியாத அற்புதமான மைல்கல்!" எனச் சொல்லி இருக்கிறார் எலான் மஸ்க்.
இந்த இலக்கை அடைய, யாரால் எல்லாம் டெஸ்லா காரை வாங்கி ஓட்ட முடியுமோ அவர்களிடம் எல்லாம் காரை விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த வேலையை செப்டம்பர் மாத இறுதி வரை செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
சரியான கார் வகைகளை, சரியான இடங்களில் வைத்திருப்பது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறர் மஸ்க். இந்த வேலையை உருதி செய்ய நிறுவனத்தில் இருக்கும் அனைத்து வகையான ரிசோர்ஸ்களையும் பயன்படுத்தி தங்கள் விற்பனையை இந்த காலாண்டு முடிவுக்கும் அதிகரிக்க வைக்க வேலை பார்த்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார் எலான் மஸ்க்.
சமீபத்தில் தான், டெஸ்லா தன் மாடல் எஸ் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் 'பிளேட் பவர்டிரெய்ன்' மற்றும் புதிய 'சேசிஸ்' உடன் கலக்கலாக இருந்தது. இந்த புதிய டெஸ்லா எஸ் ரக கார்கள், தற்போது டெஸ்லாவின் மற்ற ரக கார்கள் செல்லும் வேகத்தை விட மிக அதிக வேகத்தில் பயணிக்கும் எனச் சொல்லி இணைய உலகை ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் மஸ்க்.