பெங்களூரு: நலிந்து வரும் பொருளாதார மந்த நிலையானது பெரிய தொழில் சாலைகளை மட்டும் அல்ல, சிறு குறு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பெங்களூரில் 30 சதவிகிதத்திற்கும் மேல் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் தங்கள் வேலைகளையும் பாதுகாக்க வழிகாட்டுதல்களைக் கோரி மாநில தொழிலாளர் துறையை அணுகியுள்ளனராம்.
இது குறித்து ஊழியர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களிடமும் பேசப்பட்டு வருவதாகவும், தொழில்துறை அமைச்சகம் இது குறித்து இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை நடத்த உத்தரவு
தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் பணியிழப்பு, பணிநீக்கம் என பல கோணங்களில் ஊழியர்களுக்கு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், தொழில் நகரமான பெங்களூருவில் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிக கவலை அளிக்கும் செயலாகவே உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் அமைச்சர் எஸ் சுரேஷ்குமார் நியாமற்ற நடைமுறைகள் குறித்து தனது துறை அறிந்திருப்பதாகவும், குறிப்பாக சில நிறுவனங்களில் சம்பள குறைப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட துறைகள்
குறிப்பாக நிலவி வரும் மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் வாகனத்துறை, ஜவுளித்துறை மற்றும் உற்பத்தி துறை உள்ளிட்ட பல அடங்கும். குறிப்பாக பெங்களூருவில் உள்ள பீன்யா தொழில்துறை எஸ்டேட்டில் பல நிறுவனங்கள் ஒரு ஷிப்டுக்கு போதுமான வேலை கூட இல்லாமல் தவிக்கின்றன என்றும், இதனால் பல ஊழியர்களுக்கு வேலையே இல்லாமல் தொடர்ந்து சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ஷிப்டுக்கு கூட வேலை இல்லை
ஒரு காலத்தில் எட்டு மணி நேர ஷிப்டு என மூன்று ஷிப்டு முறையில், நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த நிறுவனங்கள், தற்போது சரியான ஆர்டர்கள் கிடைக்காமல் ஒரு ஷிப்டுக்காக கூட வேலை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில் கிடைக்கும் சில ஆர்டர்களுக்கும் சரிவர பணம் கிடைப்பதில்லை என்றும் அங்கிருக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த ஒரு ஷிப்டுகான வேலையை கூட எங்களால் சரிவர கொடுக்க முடியவில்லை என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
சரிவர ஆர்டர் இல்லை
பீன்யா தொழில்பேட்டையில் சுமார் 10,000 நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 40 - 50% நிறுவனங்கள் நிலவி வரும் மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் சில நிறுவனங்கள் சரிவர ஆர்டர்கள் கிடைக்காததாலும், சில நிறுவனங்களில் எடுத்த ஆர்டர்களுக்கு சரியாக பணம் செலுத்த முடியாமலும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்றும், தினசரி மூன்று ஷிப்டுகள் இயங்கி வந்த நிலையில் தற்போது ஒரே ஷிப்டு கூட இயங்க முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளன.
இரு மாதங்களுக்கு பின்பு வாருங்கள்
ஒவ்வொரு வருடமும் தீபாவளி அல்லது தசராவைப் ஒட்டி போனஸ் கொடுத்து விட்டு, வேலைப்பளு உள்ள காரணத்தினால் விடுமுறை அளிக்க மாட்டோம் என்றும், ஆனால் தற்போது தொடர் விடுமுறை அளித்துள்ளோம், ஆனால் போனஸ் கொடுக்கத்தான் இல்லை எனவும் இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் பணி நீக்கமும் செய்துள்ளன. அதை அவர்கள் நேரடியாக சொல்லாமல் ஊழியர்களிடம் இரு மாதங்களுக்கு பின்பு வாருங்கள் தற்போது வேலை இல்லை என்றும் கூறியுள்ளதாகவும் அத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பணி நீக்கம் அல்லது சம்பள குறைப்பு இருக்கலாம்
இங்கு ஆட்டோமொபைல் துறை மற்றும் உற்பத்தி துறைகள் வெகுவாக பாதித்துள்ளன. இத்துறையை நம்பித்தான் மற்ற தொழில்களும் இருப்பதால் மற்ற தொழில்களும் பாதித்துள்ளன என்றும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் தலைவர் ஜனார்த்தன் கூறியுள்ளார். குறிப்பாக இந்த உற்பத்தி துறையில் ஆர்டர் எடுப்பவர்கள் யாரும் இல்லாததால் வருவாய் ஈட்ட முடியவில்லை என்றும், மேலும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை தங்கள் கைகளில் இருந்து தர முடியாது என்றும், இதனால் வெளிப்படையான பணி நீக்கம் அல்லது சம்பளக் குறைப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.