உலகளாவிய ஏற்றுமதியில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 50 பில்லியன் டாலர் வீழ்ச்சி காணலாம் என்று ஐ நாவின் பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் உற்பத்திதுறை குறித்த பர்சேஸிங் மேனஜர்ஸ் இண்டெக்ஸை (Purchasing Manager's Index) மேற்கோள்காட்டி, சர்வதேச வர்த்தக மற்றும் பொருட்கள் தொடர்பான UNCTAD's பிரிவின் தலைவரான பமீலா கோக் ஹாமில்டன் இந்த இண்டெக்ஸ் ஆனது 37.5 ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது சுமார் 20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த 2004 முதல் ஒப்பிடும்போது இது மிக மோசமான வீழ்ச்சியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்றுமதியில் பாதிப்பு
இந்த விகிதமானது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 2% குறைக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதன் விளைவாக உலகளவில் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 50 பில்லியன் டாலர் வீழ்ச்சியடையலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐக்கிய நாடுகள் வல்லுனர்கள் மதிப்பீட்டின் படி, சீனாவின் முக்கிய பாகங்கள் ஏற்றுமதி குறைந்துள்ளதால், உலகளவில் மொபைல்போன் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரியில் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவினை நம்பியுள்ளன
சீனாவின் குறைக்கப்பட்ட ஏற்றுமதிகள், மற்ற நாடுகளின் ஏற்றுமதியையும் பாதித்துள்ளன என்றும் ஐ நா தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, உலகளாவிய வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாகவும், பல நாடுகள் அதன் உற்பத்திக்கு தேவையான மூலதனத்திற்காக சீனாவினை நம்பியுள்ளதாகவும் ஐ நா தெரிவித்துள்ளது.
சீனா அறிக்கையை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு
மேலும் உலகெங்கிலும் உள்ள ஏற்றுமதியில் 50 பில்லியன் டாலர் வீழ்ச்சியடையும் அளவிற்கு கொரோனாவின் பாதிப்பு உள்ளது. அதிலும் இந்த எண்ணிக்கையானது பிப்ரவரி மாதத்தினை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் இந்த மதிப்பீடானது கடந்த வாரம் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உற்பத்தி குறித்தான பிஎம்ஐ அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஐ நா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது மகத்தான சேதம்
சீனாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில்சாலை செயல்பாடுகள் மிக விரைவான வேகத்தில் சுருங்கியது. இது உலகளாவிய நிதி நெருக்கடி காலத்தினை விட மோசமான காலம் என்றும் கூறியுள்ளது. மேலும் இது கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மகத்தான சேதத்தினை எடுத்துக் காட்டுகிறது. இந்த இடையூறின் காரணமாக பல நாடுகள் ஏற்றுமதி இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு இழப்பு?
குறிப்பாக ஏற்றுமதி இழப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் சுமார் 15.6 பில்லியன் டாலர் மதிப்பும், அமெரிக்கா 5.8 பில்லியன் டாலர் மதிப்பும், இதே ஜப்பான் 5.2 பில்லியன் டாலர் மதிப்பும் இழந்திருக்கலாம். மேலும் கொரிய குடியரசு 3.8 பில்லியன் டாலர் மதிப்பும், தாய்வான் 2.7 பில்லியன் டாலரும், வியட்னாம் 2.3 பில்லியனும் ஏற்றுமதி இழப்பினை சந்தித்து இருக்கலாம் என்றும் ஐ நா அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.
எந்தெந்த துறையில் இழப்பு
குறிப்பாக இந்த இழப்புகளானது கருவிகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல் பாகங்கள் மற்றும் தகவல் தொடர்பு துறை உபகரணங்கள் உள்ளிட்ட பல துறைகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. எனினும் இதில் விவசாயம் அல்லது சேவைகள் இதில் உள்ளடங்காது என்றும் கூறப்படுகிறது.
வாகன துறையில் பலத்த இழப்பு
உதாரணத்திற்கு சீன வாகன உதிரி பாக உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யாததால், கார் உற்பத்தியாளர்களான ஹூண்டாய், ஹோண்டா மற்றும் பிற தொழில்கள் ஜப்பானில் தங்களது ஆலைகளை மூடுவதாக தெரிவித்துள்ளன. ஏனெனில் தங்களுக்கு தேவையான மூலதன பொருட்கள் இல்லை என்றும் அவை குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் வாகனத் தொழிலில் 2.5 பில்லியன் டாலர் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
விரைவில் மீட்டெடுக்கலாம்
சீனா விரைவில் படிப்படியாக தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கி வருகிறது. அது மீண்டு எழுந்தால் பிப்ரவரி இழப்பை விரைவில் சரிசெய்யக் கூடும். ஆனால் இனியும் உற்பத்தி குறைந்தால் இந்த இழப்பானது மீண்டும் அதிகரிக்கலாம். இது மேலும் விநியோக சங்கிலியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.