பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக எடுத்தார்.
இந்த நடவடிக்கை காரணமாக கருப்பு பணம் முற்றிலும் ஒழியும் என்றும் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் டிஜிட்டல் பணமாற்றம் அதிகரித்துள்ளதா? கருப்புப்பணம் குறைந்துள்ளதா? என்பதை தற்போது பார்ப்போம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெரிதாக்கும் என்றும் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பண மதிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்ததாகவும், பணமற்ற பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சி போதிய அளவில் வெற்றி பெறவில்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
ரொக்க பரிவர்த்தனைகள்
பணமதிப்பு நடவடிக்கைகள் காரணமாக டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான் என்றாலும் ரொக்க பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆய்வு அறிக்கை ஒன்றில் ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களில் மிகப்பெரிய அளவில் பண பரிமாற்றம் தான் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் மளிகை பொருட்களை கடையில் வாங்கும் போதும், ஹோட்டல்களில் சாப்பிடும்போதும் பொது மக்கள் 76 சதவீதம் பணத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
ஆனால் அதே நேரத்தில் டிஜிட்டல் பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் உள்ள சிறு கிராமங்களில் கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரொக்க பணபரிமாற்றம் தற்போது குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்கல் சர்க்கிள்ஸ்
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பணப்பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து கணக்கெடுப்பை நடத்தியது. இந்தியாவின் 342 மாவட்டங்களில் உள்ள குடிமக்களிடமிருந்து 32,000க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 68% ஆண்கள் மற்றும் 32% பெண்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகள்
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, சொத்துப் பரிவர்த்தனைகள் ரொக்கப் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் சொத்து வாங்கியவர்களில் 44% பேர் பணத்தை ரொக்கமாகவே செலுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பாதி தொகையை ரொக்கமாகச் செலுத்தியதாக 16%க்கு அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.
ரொக்க பரிவர்த்தனை
மேலும் இந்த கணக்கெடுக்கப்பில் 76% குடும்பங்கள் கடந்த 12 மாதங்களில் மளிகை பொருட்கள், உணவு மற்றும் உணவு விநியோக பொருட்களை வாங்க பணத்தை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். கடையில் இருந்து பழங்கள், காய்கறிகள் அல்லது மளிகைப் பொருட்களை வாங்கும்போது பணத்தை ரொக்கமாக செலுத்துவது மிகவும் வசதியானது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்புப்பணம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கருப்பு பணம் இந்தியாவில் குறைந்துள்ளது என்றாலும் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழியவில்லை என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்றும் கருத்துக் கணிப்பின் போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பயன்பாடு
மேலும் இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் நடந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்தாலும் இதே அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை இருந்திருக்கும் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.