இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தி நிர்வகிக்கும் அமைப்பு தான் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (SEBI - Securities and Exchange Board of India). தற்போது அஜய் தியாகி என்பவர் தான் இந்த செபி அமைப்பின் தலைவராக பதவியில் இருந்து வருகிறார்.
செபி அமைப்பின் தலைவராக யு கே சின்ஹாவுக்குப் பிறகு, கடந்த 01 மார்ச் 2017 முதல் அஜய் தியாகி பதவி வகித்து செபி அமைப்பை வழி நடத்தி வருகிறார்.
அஜய் தியாகிக்கு கடந்த பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு 6 மாத காலம் (31 ஆகஸ்ட் 2020 வரை) பணி நீட்டிப்பு வழங்கி இருந்தது மத்திய அரசு.
அஜய் தியாகிக்கு, தற்போது மேலும் 18 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து இருக்கிறது மத்திய அரசு. பணி நியமன கேபினெட் கமிட்டி (Appointments Committee of the Cabinet), அஜய் தியாகியின் இந்த நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்களாம். எனவே, அஜய் தியாகி 01 செப்டம்பர் 2020 முதல் 28 பிப்ரவரி 2022 வரை செபி அமைப்பின் தலைவராகவே தொடருவாராம்.
அஜய் தியாகி 1984-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஐ ஏ எஸ்). ஹிமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். முது கலை பொருளாதாரம், முது கலை பொது நிர்வாகம், முது கலை கணிணி அறிவியல் படித்தவர்.
2005 முதல் 2008 வரையான கால கட்டத்தில் கூட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் சில பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.
அதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பதவியில் இருந்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையில் (Department of Economic Affairs) பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் தலைவராக பதவிக்கு வந்து இருக்கிறார் அஜய் தியாகி.