உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனங்களாக விளங்கும் அமேசான் கொரோனா தொற்றுக்குப் பின்பு பல மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ரெசிஷன் அச்சம் காரணமாக அமேசான் செலவுகளைக் குறைக்கும் படி பல முக்கியமான முடிவுகளை எடுத்து வரும் நிலையில் இந்திய வர்த்தகத்தை டாப் டூ பாட்டம் மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தக் கடுமையான மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இரண்டு முக்கிய வர்த்தகத்தை மூட உள்ளது அமேசான்.
உணவு டெலிவரி சேவை மூடல்
உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான அமேசான்.காம் குழுமத்தின் இந்தியப் பிரிவு, நாட்டில் சோதனை செய்து வந்த உணவு விநியோக செயல்பாட்டை நிறுத்துவதாக வெள்ளிக்கிழமை கூறியது. உணவு டெலிவரி சேவையில் மிகப்பெரிய போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி சேவை மூடல்
இதோடு அமேசான் இந்தியா உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி தளத்தைப் பல வருடமாக இயக்கி வந்த நிலையில் இதையும் நிறுத்துவதாக வியாழக்கிழமை கூறியது. அமேசான் நிறுவனம் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தனக்கு லாபம் அளிக்காத பிரிவுகளையும் மூட உள்ளது.
பெங்களூர்
அமேசான் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் இறங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காகத் தென்னிந்தியாவில் முக்கிய வர்த்தக நகரமாக விளங்கும் பெங்களூருவில் உணவு டெலிவரி திட்டத்தை சோதனை செய்து வந்தது. தற்போது போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தாலும், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தாலும் இப்பிரிவை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளது.
அமேசான் விளக்கம்
இதுக்குறித்து அமேசான் கூறுகையில் எங்களுடைய வருடாந்திர மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, அமேசான் உணவு சேவையை நிறுத்துவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் இந்த முடிவுகளை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியோடு இந்தத் திட்டங்களைப் படிப்படியாக நிறுத்துகிறோம் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கல்வி
இதேவேளையில் கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு முன்பாகவே ஆன்லைன் கல்விக்கான தேவை அதிகமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான அமேசான் அகாடமி தளத்தை இந்தியாவில் நிறுத்துவதாகப் பல காரணங்களை முன்வைத்து அமேசான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
10000 ஊழியர்கள் பணிநீக்கம்
அமேசான் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்தியாவில் அமேசான் தனது பணிநீக்க நடவடிக்கையைத் துவங்கியுள்ளது.
ராஜினாமா
அமேசான் இந்தியா நிர்வாகம் தனது ஊழியர்களை வெறுமென 3 - 4 மாத சம்பளத்துடன் பணிநீக்கம் செய்யாமல் Voluntary Separation Program (VSP) என்ற திட்டத்துடன் ஊழியர்கள் தானாக முன்வந்து இத்திட்டத்தை ஏற்றுப் பணியை ராஜினாமா செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது.
L1 முதல் L7 வரை
இந்தியாவில் L1 முதல் L7 வரையில் அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டெக்னாலஜி பிரிவு ஊழியர்களுக்கு இந்த VSP குறித்த ஈமெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அமேசான் இந்தியாவின் VSP திட்டம் மூலம் ஊழியர்கள் நவம்பர் 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பணியை ராஜினாமா செய்வதை அறிவிக்க வேண்டும்.