சமீப வாரங்களாக ஐடி துறை பற்றிய செய்திகள் பெரியளவில் வரவில்லை எனலாம். அப்படியே வந்திருந்தாலும் அது நிறுவனங்களுக்கு சாதகமான காலாண்டு முடிவுகளாகத் தான் இருந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஊழியர்களுக்காக வழங்கப்படும் குடியுரிமை அல்லாத விசாவான ஹெச் 1பி விசாவை தடை செய்தது.
இது இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு மோசமான செய்தியாகவே பார்க்கப்பட்டது.
இந்தியர்களுக்கு பாதிப்பு தான்
ஏனெனில் இந்த ஹெச் 1பி விசாவினால் அதிகம் அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களும் சீனர்களும் தான். இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இந்தியா சீனாவுக்குத் தான் அதிகம். சீனாவுக்கு பிரச்சனையோ இல்லையோ? நிச்சயம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு பிரச்சனை தான். ஏனெனில் இன்றளவிலும் இந்திய ஐடி ஊழியர்களின் பலரின் கனவே அமெரிக்கா செல்வது தான்.
விசா கட்டணம் உயர்வு
ஏற்கனவே விசா காலத்தினை தடை செய்து ஒரு ஷாக் கொடுத்த அமெரிக்கா, தற்போது அதனை நிரந்தரமான முடக்க முடியாது என்ற காரணத்தினால், விசாவுக்கான கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக விசா தடை காலமே முடிவடைந்தாலும், விசா கட்டண அதிகரிப்பால், இது எத்தனை பேருக்கு சாதகமாக அமையும் என்றும் தெரியவில்லை. ஆக இதனால் வெளி நாட்டவர்கள் அமெரிக்கா செல்வது குறையும். முடிவு அமெரிக்கர்களுக்கு வாய்ப்புகள் பெருகும் என்பது தான்.
எவ்வளவு கட்டணம் உயர்வு?
அமெரிக்க அரசு ஹெச் 1 பி மற்றும் எல் விசாக்களுக்கு முறையே 21 சதவீதம் மற்றும் 75 சதவீதம் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை அக்டோபர் 2020 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கட்டண அதிகரிப்பு
விசா செயல்முறையை கையாளும் மற்றும் விசா கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தினை பொறுத்து இருக்கும் என்று டிஹெச்எஸ் கூறியுள்ளது. இது கொரோனா தொற்று நோய்க்கு பின்பு விசா செயலாக்கத்தில் ஏற்பட்ட சரிவினை தொடர்ந்து, 1.2 பில்லியன் டாலர் அவசர நிதிக்கு காங்கிரஸை வலியுறுத்தியுள்ள போது, இந்த கட்டண அதிகரிப்பு வந்துள்ளது.
எவ்வளவு கட்டணம்?
கடந்த ஜூலை 31 அன்றே ஒப்புதல் அளித்த கட்டண திட்டத்தின் படி, விசா புராசசிங் கட்டணம் 555 டாலர்களாகும். (இது 21 சதவீதம் அதிகமாகும்). இதே ஹெச் 1பி விசாவுக்கு 850 டாலர்களாகும் (75 சதவீதம் அதிகரிப்பு). எல் விசாக்களுக்கு (75 சதவீதம் அதிகரிப்பு) 850 டாலர்களும் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
செலவினங்கள் அதிகரிக்கும்
இந்த புதிய விதிகள் இந்திய ஐடி மற்றும் சேவை நிறுவனங்களை கணிசமாகக் பாதிக்கும். ஏனெனில் இந்த நிறுவனங்கள் பல 50% ஊழியர்களை ஹெச் 1பி அல்லது எல் 1பி விசாவின் மூலம் வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்த நிலையில் நிறுவனங்கள் ஒவ்வொரு விசா நீட்டிப்புக்கும் 4,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்த நாஸ்காம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும் கூறியுள்ளது.
அமெரிக்கா ஊழியர்களுக்கே முக்கியத்துவம்
விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட், காக்ணிசன்ட் மற்றும் ஹெச் சி எல் நிறுவனங்கள் கடந்த 2019ம் ஆண்டில் வெறும் 5,900 ஊழியர்களையே பணியில் அமர்த்தியுள்ளன. இது கடந்த 2013ம் ஆண்டில் 23,000 ஊழியர்களாக இருந்தது. ஆக அவர்கள் ஏற்கனவே உள்நாட்டில் அதிகமானவர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இந்த செலவினங்கள் அதிகரிப்பால் மேலும் விசா மூலம் பணியமர்த்தல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஊழியர்களை பாதிக்கும்
ஆக அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கை இந்தியர்களை பணியமர்த்துவதை குறைக்கும். இது நிச்சயம் இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. தற்போதைய காலகட்டத்தில் முடிந்த மட்டில் உள்நாட்டில் வேலை தேடுவதே நல்ல விஷயம்.