உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான பண இருப்புடன் இருப்பது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பீடு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் பிற முன்னணி நிறுவனங்களைப் போலப் பணவீக்க உயர்வு, பொருளாதாரச் சரிவு, ரெசிஷன் அச்சம், ரீடைல் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஒரு வாரத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துபவர்கள் (contract-based recruiters) பலரை பணிநீக்கம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தல் மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான ஒரு பகுதியாக அறிவித்துள்ளது.
100 ஒப்பந்த ஊழியர்கள்
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிள் எப்போதும் செய்திடாத வகையில் ஒரு அரிய நடவடிக்கையாகச் சுமார் 100 ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் புதிய பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கு ஆட்சேர்ப்புச் செய்பவர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதால், இனி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதில் மந்தநிலை உருவாகும்.
நிரந்தர ஊழியர்கள்
தற்போது ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்துள்ளது, நிரந்தர ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யாதது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் நிம்மதியை கொடுத்தாலும், வேலைவாய்ப்புச் சந்தையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற அமெரிக்க நிறுவனங்கள்
ஆப்பிள் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 ஊழியர்களைப் பணியாற்றி வரும் நிலையில் எப்போதும் இல்லாத வகையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவில் ஆப்பிள் மட்டும் அல்லாமல் டெஸ்லா, மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான், ஆர்க்கிள், விரைவில் கூகுள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தயாராக உள்ளது.
2019 பணிநீக்கம்
ஆப்பிள் முன்பு 2019 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் கார்க்கில் ஒரு பெரிய குழு ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது. அந்த நேரத்தில், நிறுவனம் தயாரிப்பை மேம்படுத்த உதவுவதற்காக Siri உரையாடல்களின் பதிவுகளைக் கேட்க பல நூறு ஒப்பந்ததாரர்களை நியமித்து இருந்தது.