கொரோனா வைரஸ் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது கொரோனா வைரஸ்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்படுபவர்கள் என்றால் அது, ஐடி துறையினர்கள் தான்.
காரணம், நல்ல காலத்திலேயே, ஏதாவது பிரச்சனை என்றால், லே ஆஃப் என களம் இறங்கிவிடுவார்கள். இப்போது இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும் போது எப்படி சும்மா இருக்க முடியும்?
90 நாட்கள்
SAP, மார்கன் ஸ்டான்லி, சேல்ஸ் ஃபோர்ஸ், பலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், பே பல் PayPal, சிட்டி குரூப், ஜேபி மார்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா, பூஸ் ஆலன் ஹமில்டன் (Booz Allen Hamilton) போன்ற கம்பெனிகள், 90 நாட்களுக்கு, கொரொனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு லே ஆஃப் செய்வதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நம் ஊரில்
மேலே சொன்னவைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களிடம் கொஞ்சமாவது பொருளாதார பிரச்சனைகளைத் தாக்கு பிடிக்க பணம் இருக்கும். ஆனால் நம் ஊரில் இருக்கும் சாதாரண கம்பெனிகளால் இந்த ஷாக்கை தாக்கு பிடிக்க முடியுமா? அந்த அளவு பண பலம் இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்
பயம்
இந்த லாக் டவுன் பிரச்சனை எல்லாம் முடிந்து, மீண்டும் வேலைக்குப் போவோமா? பார்த்த வேலை திரும்ப கிடைக்குமா? பார்க்கும் வேலைக்கு அடுத்த மாதம் சம்பளம் முழுமையாகக் கிடைக்குமா? வரும் சம்பளம் எத்தனை சதவிகிதம் பிடித்தத்துடன் வரும்? என பல மனக் கேள்விகளிலேயே பயந்து கொண்டு தங்கள் வாழ்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெங்களூரில் ஐடி வேலை செய்து பிழைக்கும் ஊழியர்கள்.
ஐடி ஊழியர்கள் யூனின் தலைவர்
"சில ஐடி கம்பெனிகளில் 30 % வரை சம்பளத்தைக் குறைத்து இருக்கிறார்கள். இன்னும் சில கம்பெனிகள் 15 நாட்கள் சம்பளம் இல்லாத விடுப்பு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் சில கம்பெனிகளோ சம்பளத்துடன் விடுப்பு கொடுத்து இருக்கிறார்கள்" எனச் சொல்கிறார் ஐடி ஊழியர்கள் யூனின் தலைவர் குமாரசாமி ஏ சி.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தின் ஐடி மற்றும் ஐடி சார்ந்த வேலை பார்க்கும் ஊழியர்கள் யூனியனின் செயலர் சூரஜ் நிதியங்கா "இதுவரை 496 ஊழியர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இந்த விவரங்களை எங்கள் பொதுச் செயலர் தபன் சென்னுக்கு அனுப்பி இருக்கிறோம். இந்த விவகாரத்தை மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்துடன் பேசி ஒரு தீர்வு காணச் சொல்லி இருக்கிறோம்.
சட்ட ரீதியான நடவடிக்கை
இப்படி தடாலடியாக ஐடி பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதை எதிர்த்து, பேரழிவு மேலாண்மைச் சட்டம் (Disaster Management Act) மற்றும் தொழிற்சாலை பிரச்சனைகள் சட்டத்தின் (Industrial Dispute Act) கீழ் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் சூரஜ் நிதியங்கா.
புகார் வரவில்லை
ஆனால் தொழிலாளர் நல செயலர் பி மணிவண்ணனோ, இதுவரை புகார்கள் வர வில்லை எனச் சொல்லி இருக்கிறார். கடந்த மாதம் லே ஆஃப் தொடர்பாக அதிகம் புகார்கள் வரவில்லை. ஆனால் இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை கொடுக்க இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் தொழிலாளர் நலச் செயலர்.