இந்திய ஐடி நிறுவனங்களில் டெக் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் ஐடி ஊழியர்கள் அதிகளவில் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பெரும் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கத் துவங்கியுள்ளது.
இதேவேளையில் நடுத்தரப் பிரிவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்கள் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்கவும் பல புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
பெரிய ஐடி நிறுவனங்கள்
பொதுவாகப் பெரிய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தைக் கொடுத்தும், அதிகளவிலான ஊழியர்களையும் பணியில் சேர்க்க முடியும், ஆனால் நடுத்தர ஐடி நிறுவனத்தால் இத்தகையை முடிவை எடுக்க முடியாது. இதனால் மாற்று வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நடுத்தர ஐடி நிறுவனங்கள்
இதற்காக நடுத்தரப் பிரிவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் மற்றும் சம பிரிவில் இருக்கும் நிறுவன ஊழியர்களைப் பணியில் சேர்த்து வந்தாலும், புதிதாக ஒரு முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதாவது ஐடி துறையில் இல்லாத ஊழியர்கள் ஐடி துறைக்குள் வர வேண்டும் என எண்ணம் கொண்ட ஊழியர்களைப் பயிற்சி கொடுத்துப் பணியில் சேர்க்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
எல் அண்ட் டி இன்போடெக்
எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 5000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இதில் 1000 ஊழியர்களை hire-train-deploy பிரிவில் சேர்க்க உள்ளோம். அதாவது ஐடி துறை அல்லாத ஊழியர்களுக்கு 6 மாத பயிற்சி கொடுத்து போதிய திறன்களைப் பெற்று இருக்கும் பட்சத்தில் பணியில் சேர்க்கப்படுவார்கள் என இந்நிறுவனத்தின் சிஇஓ
சஞ்சய் ஜலோனா தெரிவித்துள்ளார்.
Persistent Systems
இதேபோல் புனே-வை தலைமையிடமாகக் கொண்டு Persistent Systems, பிற துறையில் இருக்கும் சரியாகச் சம்பளம் கிடைக்கப்படாத ஊழியர்களை ஐடி துறையில் ஈர்க்கும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பிற துறையில் பணியாற்றும் இன்ஜினியர்களுக்குத் தங்களது நண்பர்கள் போல் ஐடி துறைக்குள் வர வேண்டும் என விரும்பினால் அதற்கான பயிற்சி கொடுத்துத் தேர்வாகும் பட்சத்தில் ஐடி துறையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என Persistent Systems சிஇஓ சந்தீப் கால்ரா தெரிவித்துள்ளார்.
ஜாக்பாட்
நடுத்தர ஐடி துறையில் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றத்தின் மூலம் பல லட்சம் ஊழியர்கள் ஐடி துறையில் பணியாற்ற வாய்ப்புப் பெறுவார்கள். இப்படி பிற துறையில் இருந்து ஐடி துறைக்கு வரும் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் கொடுக்கப்படும் இதனால் நடுத்தர ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து அதிக லாபத்தைப் பெற முடியும்.