கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையினை அதிகளவில் சமீப காலமாக பேச வைத்தவர், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான்.
ஏனெனில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, கிரிப்டோகரன்சிகள் பற்றி உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. உலகின் பல பெரும் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன் வந்தன. பல நிறுவனங்களும் ஏற்கனவே முதலீட்டினை செய்துள்ளன.
இப்படி அனுதினமும் அதிரடியாக ஏற்றம் கண்டு வந்த பிட்காயின் மதிப்பானது, எலான் மஸ்கின் ஒரே ட்வீட்டால் சமீப நாட்களாக பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
டெஸ்லா ஆதரவு
இன்று உலகம் முழுவதும் மிக பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். இது சர்வதேச சந்தையில் பலராலும் விரும்பப்படும் ஓரு முதலீடாக மாறியுள்ளது. அதுவும் டெஸ்லாவின் வருகைக்கு பின்னர், பிட்காயின் மதிப்பானது இன்னும் சற்று கூடுதலாகவே இருந்து வந்தது. இதற்கிடையில் தான் சமீபத்தில் பிட்காயின் மதிப்பானது வரலாற்று உச்சத்தினை தொட்டது.
கடும் சரிவு
எலான் மஸ்க், முன்னதாக தங்களது வாகன நிறுவனத்தில் பிட்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார். எனினும் அதன் பின்னர் தனது வாகனங்களை வாங்குவதற்கு பிட்காயினை ஏற்கொள்வதை நிறுத்துவதாக ட்விட்டர் மூலமாக அறிவித்தார். இதனையடுத்து பிட்காயின் மதிப்பானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. அதிலும் இன்று மூன்று மாதங்களுக்கு பிறகு 45,000 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது.
தற்போது என்ன நிலவரம்
பிட்காயின் விலையானது தற்போது 8.52% குறைந்து, 44,899.71 டாலர்களாக காணப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 42,212.56 டாலர்களாகும். இதே உச்சமானது 49,275.60 டாலர்களாகும். இதன் வரலாற்று உச்சம் 64,829.14 டாலர்களாகும். எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் இது வரையில் 54.54% லாபத்தில் தான் பிட்காயின் காணப்படுகிறது.
கடும் விமர்சனம்
கடந்த வாரம் பிட்காயின் குறித்த எலான் மஸ்கின் அறிவிப்புக்கு பிறகு, இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தினை பெற்றுள்ளது. அவர் தனது நிறுவனம் பேமெண்டாக ஏற்காது என்று கூறினாலும், பிட்காயினில் முதலீடு செய்தததை விற்பனை செய்யவில்லை. அதனை நிறுவனம் அப்படியே வைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இதே போல நகைச்சுவையாக பேசப்பட்ட டோஜ்காயின் மதிப்பும் இன்று எலான் மஸ்கினால் சந்தை மதிப்பில், 5வது இடத்தினை பிடித்துள்ளது. எனினும் டோஜ்காயினும் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.