இந்தியாவில் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டும், கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான பட்டதாரிகள், இன்ஜினியர்கள், டெக் ஊழியர்கள், உயர் தொழில்நுட்பம் ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு முதல் இலக்காக இருப்பது அமெரிக்காவும், கனடாவும் தான்.
அமெரிக்கா போலவே அதிகப்படியான வாய்ப்புகள், அதிகப்படியான சம்பளம், சிறப்பான வாழ்க்கை முறை, மருத்துவ வசதிகள், அதிகளவிலான இந்தியர்கள் இருக்கும் காரணத்தால் கனடா மிகவும் விருப்ப தேர்வாக உள்ளது. இதனாலேயே கனடா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் அந்த நாட்டிலேயே செட்டிலாக முயல்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியர்களுக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் கனடா அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளது.
கனடா
ஜனவரி 2023 முதல் கனடா நாட்டில் பணியாற்றும், இந்தியர்கள் மற்றும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் பலன் அளிக்கும் வகையில், கனடா நாட்டில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையை அனைத்து மட்டத்திலும் தீர்க்க வேண்டும் என்பதற்காக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தற்காலிக விசா ஊழியர்கள்
கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் செய்தியாளர்களிடம் பேசும் போதும், கனடாவில் பணியாற்றும் அனைத்து தற்காலிக விசா ஊழியர்களின் மனைவி / கணவன் மற்றும் பணியாற்றும் வயதில் இருக்கும் அவர்களுடைய பிள்ளைகள், சொந்த குடும்ப உறுப்பினர்களுக்குக் கனடாவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி / கணவன்
கனடாவில் இதற்கு முன்பு தற்காலிக விசாவில் high-skill பணியில் பணியாற்றுவோரின் மனைவி / கணவன் மட்டுமே கனடாவின் principal applicant-ன் விசா காலம் வரையில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.
2 வருட சலுகை
தற்போது அனைத்து மட்டத்திலும், அனைத்து திறன் கொண்ட தற்காலிக விசாவில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை 2 வருடம் மட்டுமே தற்காலிகமாக அளிக்கப்படும் சலுகை என்பதைக் கனடா நாட்டின் அமைச்சரான சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.
நிதி ஸ்திரத்தன்மை
இந்த அறிவிப்பு மூலம் கனடாவில் இருக்கும் தற்காலிக விசா ஊழியர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தின் நல்வாழ்வு, உடல் ஆரோக்கியம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை மேம்படும் எனத் தெரிவித்துள்ளார் கனடா நாட்டின் அமைச்சரான சீன் ஃப்ரேசர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு வொர்க் பர்மிட்
ஜனவரி 2023 முதல் துவங்கும் இந்த 2 வருட சலுகை திட்டம் மூலம் கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் அனைத்து மட்ட ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கனடாவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும். உதாரணமாக ஹெல்த் கேர், வர்த்தகம், ஹாஸ்பிடாலிட்டி துறையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூடப் பணியாற்ற முடியும்.
2,00,000 வெளிநாட்டு ஊழியர்கள்
இந்த அறிவிப்பு மூலம் கனடாவில் இருக்கும் 2,00,000 -த்திற்கும் அதிகமாக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வர முடியும். இதன் வாயிலாகக் கனடா முழுவதும் அனைத்து துறையிலும், அனைத்து மட்டத்திலும் இருக்கும் ஊழியர்கள் தட்டுப்பாடு தீர்க்கப்பட உள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை
கனடாவின் அனைத்து மாகாணத்திலும் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகக் கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
வொயிட் காலர் மற்றும் ப்ளூ காலர்
இந்த அறிவிப்பின் மூலம் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளில் இருக்கும் இந்தியர்களின் குடும்பம் மட்டும் அல்லாமல் பல்வேறு ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் இருக்கும் இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேலைக்குச் சென்று பணத்தைச் சம்பாதிக்க முடியும்.
ஜாக்பாட்
உதாரணமாக டிரைவர், ஹோட்டல், ஹாஸ்பிட்டல் எனப் பல துறையில் பணியாற்றும் ப்ளூ காலர் ஊழியர்கள் தங்களது கணவன் அல்லது மனைவியைக் கனடாவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்று அவர்களது வருமானம் அதிகரித்து நிதியியல் நிலை பெரிய அளவில் மேம்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.