சென்னை: விருப்பமான சேனல் தேர்வு என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகும். இந்த திட்டத்தால் மக்களுக்கு ஏதேனும் நன்மை உளள்தா என்று பார்த்தால் ஒரு நன்மையும் இல்லை. இந்த விருப்ப தேர்வு முறை என்பது சேனல்கள் மற்றும் அரசுக்கு வருவாய் அளிக்கும் அட்சய பாத்திரமாக மாறி உள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து புதிய கேபிள்டிவி சட்டம் அமலுக்கு வந்தது. இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கேபிள் டிவி சட்டப்படி விருப்பமான சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்றார்கள்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் டி.டி.எச். சேவைகள் மூலம் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டது.
18 சதவீதம் ஜிஎஸ்டி
இந்த புதிய சட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் 130 ரூபாயை நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணமாக 130 ரூபாய் + 18% ஜி.எஸ்.டி கட்டணமும், அதன் பின்னர் தங்கள் தேர்வு செய்திருக்கும் சேனல்களுக்கான கட்டணமும் மாதம் மாதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கட்டணம் உயர்வு
முன்னதாக பழைய முறைப்படி டிடிஹெச் அல்லது கேபிளில் படம் பார்க்க 150 முதல் 300 வரை செலுத்தி இருந்த மக்கள் இப்போது சேனல்களை பார்க்க குறைந்த பட்சம் 300 முதல் 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிக கட்டணம்
மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சேனல்கள் ஒவ்வொன்ரும் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளன. ஆனால் அதிகபட்சம் 19 ரூபாய்க்கு மேல் போகக்கூடாது என்ற நிலையில் சில சேனல்கள் 10 ரூபாய் வசூலிக்கின்றன. சில சேனல்கள் 6 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் என்று தனித்தனியாக வாங்குகின்றன.
தனித்தனியாக வரி
இப்படி நாம் வாங்கும் ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி வரியாக 18 சதவிதம் செலுத்த வேண்டும் என்பதே நிதர்சமான உண்மை. அதாவது கேபிள் அடிப்படை கட்டணமாக 130 மற்றும் அதற்கு ஜிஎஸ்டியாக 18 சதவீதம் கட்டுவதோடு மட்டுமல்லாமல். கூடுதலாக தேர்வு செய்யும் ஒவ்வொரு சேனலுக்கும் கட்டணம் மற்றும்ஜிஎஸ்டி செலுத்த வேண்டி உள்ளது.
கட்டணம் உயர்வு
இதன் காரணமாக கேபிள் கட்டணம் என்பது இருமடங்காக உயர்ந்துள்ளது. 150 ரூபாய் செலுத்திய வீடுகள் 300 ரூபாயும், 300 ரூபாய் செலுத்தியவர்கள் இப்போது 600 ரூபாயும் செலுத்துகிறார்கள். ஒரு வீட்டுக்கு 150 ரூபாய் மாதம் வரி என்றால் மொத்தம் இந்தியா முழுவதும் உள்ள பல கோடி வீடுகளுக்கு எத்தனை லட்சம் கோடி பணம் வெளியேறும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
விருப்ப சேனல் தேர்வு
இந்த முறை குறித்து டிடிஹெச் நிறுவனங்களை கேட்டால் ஜிஎஸ்டியை குறை சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் டிடிஹெச் நிறுவனங்கள், சேனல்கள் மற்றும் அரசு இந்த மூவருக்குமே பணம் தரும் அட்சய பாத்திரமாக விருப்பமான சேனல் தேர்வு முறை உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.