நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பிரச்சனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிலும் லடாக் எல்லை பதற்றத்திற்கு பின்பு சீனாவுக்கு எதிரான பரப்புரைகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிலும் குறிப்பாக சீன வர்த்தகம் தொடர்பான பரப்புரைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சீனா பொருட்கள் வேண்டாம்
சீனாவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டும் விதமாக, மக்கள் சீன பொருட்கள் வேண்டாம் என புறம் தள்ளி வருகின்றனர். இதனை அரசு தரப்பிலும் தெளிபடுத்தும் விதமாக மக்களின் பாதுகாப்பு கருதி சீனாவில் 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பதாக சில தினங்களுக்கு முன்பு தான் தடை விதித்தது.
நெடுஞ்சாலை துறையில் அனுமதியில்லை
இந்த நிலையில் தற்போது நெஞ்சாலைத் துறையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருப்பது வரவேற்கதக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
அது மட்டும் அல்ல, முன்னதாக நெஞ்சாலைத் துறையில் உள்ள சீன நிறுவனங்களுக்கும் தடை விதிப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். அதோடு நெடுஞ்சாலைத் துறைகளில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்தம் பெற கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அனுமதியில்லை
மேலும் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது இந்திய நிறுவனங்களுடன் கூட்டாக சேர்ந்து பங்கேற்பதையோ நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேலும் இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அதேபோல சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் சீன முதலீடுகளை ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
விதிமுறைகள் எளிதாக்கப்படும்
இந்திய நிறுவனங்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், பெரிய திட்டங்களில் அவற்றின் பங்களிப்பினை உறுதி செய்யும் வகையிலும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் மற்றும் தேசிய நெஞ்சாலைத் துறை ஆணையத்தின் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், ஆக ஒப்பந்தங்களை பெற தகுதியான இந்திய நிறுவனங்களுக்காக விதிமுறைகளை எளிதாக்க கூறப்பட்டுள்ளதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார்.