டெல்லி: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் தான் சீனாவின் நடவடிக்கை உள்ளது. ஏனெனில் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
ஆனாலும் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா ஒரு பார்ட் தான் என்றும் கூறி வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் சீன இந்திய எல்லை பிரச்சனைக்கு முன்பு இருந்தே, இந்தியா சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
இதற்கு சிறந்த உதாரணம் தான் FDI விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் அன்னிய நேரடி முதலீடுகள் (Foreign Direct Investment) குறைய வாய்ப்புள்ளதாக அப்போது ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நேரடியாக முதலீடு செய்ய முடியாது?
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. புதிய அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது. மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும என்ற நிலை இருந்து வருகிறது.
அனுமதி கட்டாயம்
முன்னதாக இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவும் இதில் சேர்க்கப்பட்டது. ஆக இந்திய நில எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன்னனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது வா்த்தக அமைச்சகம். இந்திய நிலப்பரப்புடன் ஒட்டிய நாடுகள் என்பது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் தான்.
அனுமதி பெற்றே ஆக வேண்டும்
இவற்றில் சீனாவைத் தவிர, ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிகக் குறைந்த முதலீடு மட்டுமே செய்திருக்கின்றன. இதே பாகிஸ்தான், பூடான் இரண்டு நாடுகளின் முதலீடுகளே இல்லை. பாதுகாப்பு, தொலைத்தொடா்பு உள்ளிட்ட 16 துறைகளைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகளிலும், தொழில்களிலும் சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற நிலைமைக்கு மத்தியில், தற்போது இந்தியாவின் அனுமதியை பெற்ற பின்பே முதலீடு செய்ய முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
சீனாவின் கிரேட் வால் நிறுவனம்
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே சீனாவின் கிரேட் வால் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியினை தொடங்க ஆர்வம் தெரிவித்தது. இதற்கிடையில் தற்போது கிரேட் வால் நிறுவனம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு காத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய அன்னிய முதலீட்டு கொள்கைக்கு பின்னர், 175 திட்டங்கள் நிலுவையில் உள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அதகாரி ஒருவர் கூறியதாக இடி செய்திகள் கூறுகின்றன.
பல கட்டமாக ஆய்வு
மேலும் ஒவ்வொரு திட்டமும் பல வகையிலும் ஆய்வு செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் ஜெனரல் மோட்டார்ஸின் புனே ஆலையை கிரேட்வால் நிறுவனம் கையகப்படுத்தியது. அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இது வாகனங்களை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிறுவனம் தற்போது அரசாங்கத்தினை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அனுமதி கிடைக்குமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இறையாண்மை பாதுகாப்பு கருதி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு, இந்தியா தடை விதித்தது. ஜூன் 15 இந்திய சீன எல்லையில் இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பல இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், சற்று கடினமான நடவடிக்கைகளையே சீனா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..