கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த அமர்வில் 4% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இது ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றது.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் தேவையானது குறையலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
2வது நாளாக ஏற்றம்
இதற்கிடையில் விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஓபெக் நாடுகளின் இந்த முடிவானது வந்துள்ளது. இந்த உற்பத்தி குறைப்பானது சிறிய அளவில் என்றாலும், இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது பலத்த ஏற்றத்தினை கண்டது. இன்றும் அதனை தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இன்று என்ன நிலவரம்?
WTI கச்சா எண்ணெய் விலையானது இன்று 2% மேலாக அதிகரித்து, பேரலுக்கு 88.72 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 90 டாலர்களுக்கு மேலாக சென்ற நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இது இன்னும் ஏற்றம் காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
WTI கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்திருந்தாலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து, பேரலுக்கு 94.97 டாலராக காணப்படுகின்றது.
ஓபெக்- ன் முடிவு?
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான (OPEC) மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள், அக்டோபர் மாதத்தில் இருந்து தினசரி 1 லட்சம் பேரல்கள் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச அளவிலான தேவையில் 0.1% மட்டுமே. அடுத்த கூட்டம் அக்டோபர் 5 அன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இனி இருக்கும் சூழ்நிலையை பொறுத்து உற்பத்தியில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் நிலைபாடு
சர்வதேசசந்தையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு மத்தியில் இது விலையை கட்டுக்குள் வைக்க உதவலாம். கடந்த மாதமே சவுதி அரேபியா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க, உற்பத்தியினை குறைக்க கோரிக்கை விடுத்தது.
எனினும் உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யா, இந்த உற்பத்தி குறைப்பினை ஆதரிக்க வில்லை. இது உற்பத்தியினை சீராக வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவனிக்க வேண்டிய விஷயம்
ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டிருந்தாலும், ஏற்கனவே அங்கோலா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உற்பத்தி இலக்கினை எட்டவில்லை. இது தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீள்ச்சி காணவில்லை. ஆக ஏற்கனவே குறிப்பிட்ட இலக்கினை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. இது மீண்டும் வர இன்னும் கொஞ்ச காலம், ஆகலாம். ஆக தற்போதைய உற்பத்தி குறைப்பானது, மேலும் விலையில் ஏற்றம் காண வழி வகுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரானின் ஆதரவு இருக்கலாம்
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சீனாவிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகின்றது. இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் ஈரான் உற்பத்தியினை மேம்படுத்தலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆக இது விலையினை ஈடுக்கட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தாக்கம்?
எப்படியிருப்பினும் தற்போதைய விலையேற்றம் என்பது மீண்டும் இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்தியாவில் தனது பயன்பாட்டில் பெருமளவிலான எண்ணெய்யினை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வரும் நிலையில், சர்வதேச சந்தையின் தாக்கம், இந்தியாவில் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.