எந்த ஒரு பிரதிபலனும் இல்லாத ஒரு நல்ல செயல் செய்தால், அது சில சமயம் மிக உயர்ந்த இடத்தில் இருந்து பாராட்டு கிடைக்கும் வகையில் இருக்கும் என்பதற்கு உலகின் பல சம்பவங்கள் உதாரணமாக இருந்துள்ளது.
அந்த வகையில் துபாயில் உணவு டெலிவரி ஏஜென்ட் ஒருவர் செய்த ஒரு சிறிய செயல், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் வரை சென்றுள்ளது.
அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான், துபாய் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஒரே ஒரு செங்கலை அகற்றினார். இதற்காக அவர் இன்று நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறார்.
உணவு டெலிவரி ஏஜெண்ட்
துபாயை சேர்ந்த உணவு டெலிவரி ஏஜெண்ட் அப்துல் கஃபூர் என்பவர் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு வந்து பணி செய்து வருகிறார். அவர் சமீபத்தில் உணவு டெலிவரி செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பிசியான சாலை ஒன்றில் செங்கல் இருப்பதை பார்த்து உள்ளார். உடனே அவர் தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த பிசியான சாலையில் உள்ள செங்கலை அகற்றி உள்ளார். இதனால் அந்த சாலையில் ஏற்படவிருந்த விபத்துகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
துபாய் இளவரசர்
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் அவர்கள் அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். உடனடியாக அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இளவரசர், பிசியான சாலையில் உள்ள செங்கலை அகற்றிய டெலிவரி ஏஜெண்ட்டை தான் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
துபாய் காவல்துறை
உடனடியாக துபாய் காவல்துறையினர் அந்த டெலிவரி ஏஜெண்ட் மொபைல் நம்பரை கண்டு பிடித்து அவரை தொடர்பு கொண்டு துபாய் இளவரசர் உங்களை பார்க்க விரும்புவதாக கூறினர். இதனையடுத்து ஆச்சரியமடைந்த அவர் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதாகவும் துபாய் வந்தவுடன் கண்டிப்பாக இளவரசரை சந்திக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
துபாய் இளவரசருடன் சந்திப்பு
அதன்பின் அப்துல் கஃபூர் துபாய் வந்தவுடன் துபாய் இளவரசரை சந்தித்தபோது, இளவரசர் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். துபாய் இளவரசர் தனக்கு நன்றி தெரிவித்த போது எனது கண்களையும் காதுகளையும் என்னால் நம்ப முடியவில்லை என அப்துல் கஃபூர் தெரிவித்துள்ளார்.
நன்றி
நான் செய்த சிறிய செயலுக்கு நன்றி இவ்வளவு பெரிய வெகுமதி கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், துபாய் இளவரசரை சந்தித்த காட்சி என் கண்ணிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெகுமதி
மேலும் அப்துல் கஃபூரின் குடும்பம் குறித்து துபாய் இளவரசர் விசாரித்ததாகவும், அவர் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கலாம் என்றும் கூறியதாகவும் அப்துல் கஃபூர் தெரிவித்துள்ளார். மேலும் தனது செயலுக்கு வெகுமதிகள் அளித்து பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.