வெளிநாடு பயணம் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்கா செல்பவர்கள் ஒரு மினி மெடிக்கல் ஸ்டோரையே தங்களது பைகளில் எடுத்துச் செல்வார்கள். அதில் சாதாரண தலைவலி ஆரம்பித்து மிகப் பெரிய நோய்களுக்கான மருந்துகள் வரை இருக்கும்.
அதை உற்றுக் கவனித்து வந்த அமெரிக்கா, மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
விமான பயணம்
பொதுவாக நாம் எந்த ஒரு நாட்டுக்கு விமான பயணம் மேற்கொண்டாலும், அங்கே செல்லும் போது, சரியான மருத்துவர் ஆலோசனை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்லக் கூடாது. ஆனால் பல நாடுகளின் விமான நிலையங்களில் அதைக் கொண்டுகொள்வதில்லை. ஆனால் அமெரிக்காவில் அது இப்போது கடுமையாக அமலுக்கு வந்துள்ளது.
முதல் காரணம்
இந்தியர்கள், அமெரிக்கா செல்லும் போது அதிக மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்ல இரண்டு முக்கிய காரணங்கள் என கூறுகின்றனர். முதல் காரணம் இந்தியாவை விட அமெரிக்காவின் மருந்து பொருட்களின் விலை அதிகம். அமெரிக்கர்களுக்கு அது அவர்களது மருத்துவ காப்பீடுகளில் கிடைத்துவிடும்.
இரண்டாவது காரணம்
இரண்டாவது காரணம், அமெரிக்காவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஒரு டோலோ 650 மாத்திரையைக் கூட உங்களால் முடியாது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. நம் வீட்டில் இருக்கும் மெடிக்கல் ஸ்டோர்களில் நாம் உடல் நலக் குறைவு, சளி என்று கேட்டால் அவர்களே சில மாத்திரைகளை வழங்கிவிடுவார்கள்.
பரிந்துரை சீட்டு
வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான இந்தியர்கள், மருந்து பொருட்களைக் கொண்டு செல்லும் போது அதற்கான மருத்துவர் ஆலோசனை, பரிந்துரை சீட்டை எடுத்துச்செல்வதில்லை. அதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பதும் இல்லை.
தடை
சில மருந்து மாத்திரைகளுக்கு இந்தியாவில் அனுமதி இருக்கும். ஆனால் அமெரிக்காவில் அனுமதி இருக்காது. அதுபோன்ற மருந்து பொருட்களைக் கொண்டு செல்லும் போது அமெரிக்கா அனுமதிக்கான விசா தடையில் கூட பலர் சிக்கியுள்ளார்கள் என ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் மிகவும் பிரபலமான ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் விசா ரத்து செய்யப்பட்டு, அமெரிக்காவில் நுழைய 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மசாலா பொருட்கள்
மருந்து பொருட்கள் மட்டுமல்லாமல் மசாலா பொருட்களையும் இந்தியர்கள் வெளிநாடு செல்லும் போது எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது தயாரித்து 3 மாதங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக உள்ளது.
மருத்துவர்கள்
வெளிநாடு செல்லும் பயணிகள் பலர் விக்ஸ் வேப்பரப் தைலம், தலைவலி, காய்ச்சல் மாத்திரை என ஈஎன்ஓ, சில ஆயுர்வேத மருந்து பொருட்கள் என பலவற்றுக்கு பரிந்துரை சீட்டை கேட்கின்றனர். தூக்கம், மனநல பிரச்சனைகள் போன்றவற்றுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துச்செல்லும் போது பேப்பர் வொர்க் அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.