டெல்லி: முன்னதாக பல கோடி ரூபாய் நிதியினை ஏழை மக்களுக்காக ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியா தற்போது 21 நாள் லாக்டவுனில் இருந்து வருகிறது.
இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் முதல் கொண்டு தொழிலதிபர்கள் வரை அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அடிப்படை தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இதனால் விரைவில் அரசிடம் இருந்து தகுந்த நிதியினை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் பல தரப்பிடம் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு & முதியோர்களுக்கு
மேலும் முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு என சிறப்பு நிதி உதவியாக மாதம் 1000 ரூபாய் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போல் பெண்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் 500 ரூபாய் செலுத்தப்படும் என்றும், இது அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
சுய உதவி குழுக்களுக்கு நிதி
இது தவிர சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 லட்சம் அளவுக்கு பினை இல்லா கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது முன்னர் 10 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த திட்டத்தின் மூலம் 7 கோடி குடும்பங்கள் பயன் அடையும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு சலுகை
இதெல்லாவற்றையும் விட அன்றாட கூலித் தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கட்டுமானம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுகான நல நிதியை பயன்படுத்தும் வகையில் மாநில அரசுகளூக்கு 31,000 கோடி ரூபாய் நிதியினை பயன்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.