டெல்லி: வரும் 15ஆம் தேதி முதல் டோல்கேட்களில், பாஸ்டாக் (Fastag) கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி முதலே பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், வாகன ஓட்டிகள் வேண்டுகோளை ஏற்று ஜனவரி 15ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்த காலக்கெடுவை, பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான வாகனங்களில் பாஸ்ட்டேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை பாஸ்டேக் ஒட்டாமல் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து சென்றால், அந்த வழி தடத்திற்கான வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டி வரும்.
சந்தேகங்கள்
இப்போது, வாகன ஓட்டிகளுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்பது, ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் ஸ்கேனர் மெஷின் சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பதுதான்.
சட்டம்
ஆனால், இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டவட்டமாக ஒரு விளக்கமளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயம் மற்றும் சேகரிப்பு சட்டத் திருத்தத்தில் இது தொடர்பான விளக்கம் இடம் பெற்றுள்ளது. அந்த விளக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
இலவசம்
ஒரு வாகனத்தில் செயல்படும் வகையிலான பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அந்த கணக்கில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இருந்தும்கூட சுங்கச்சாவடிகளில் உள்ள ஸ்கேன் மிஷின் பழுது காரணமாக கட்டணத்தை வசூலிக்க முடியாமல் போனால், அந்த வாகன ஓட்டி இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார். கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதற்காக ஒரு ரசீதையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.
எளிதாக கடந்து செல்லலாம்
எனவே வாகன ஓட்டிகளே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சுங்கச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக பாஸ்டேக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாவிட்டால், உங்கள் கையிலிருந்து பணத்தை கொடுக்க தேவை இல்லை. நீங்கள் ராஜாவைப் போல அந்த சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்லலாம். எனவே, பாஸ்டாக் ஸ்டிக்கரை ஒட்டி, மகிழ்ச்சியாக புறப்படுங்கள்.