இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பழமையான வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான காட்ரிஜ் குழுமம் இரு பிரிவுகளாக உடைகிறது. காட்ரிஜ் குடும்பத்தில் நீண்ட காலத்திற்குப் பின்பு சொத்து மற்றும் வர்த்தகம் பிரிக்கப்படும் காரணத்தால் காட்ரிஜ் குழுமத்தைத் தனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தனித்தனியாக நிர்வாகம் செய்ய இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
இந்தியாவின் பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் காட்ரிஜ் குழுமத்தின் இந்தப் பிரிவு மொத்த இந்திய வர்த்தகச் சந்தையையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
காட்ரிஜ் குழுமம்
காட்ரிஜ் குழுமம் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும், தொடர்ந்து நிலையான வர்த்தக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் இருக்கும் காரணத்தால், இன்றும் இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உள்ளது.
பூட்டுத் தயாரிப்பு
1897ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் காட்ரிஜ் குழுமம் முதலில் பூட்டுத் தயாரிப்பில் துவங்கி இன்று ஏரோஸ்பேஸ், விவசாயம், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபகரணங்கள், கெமிக்கல்ஸ், கட்டுமானம், எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், ரியல் எஸ்டேட், செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், இன்போடெக் எனப் பல துறையில் இயங்கி வருகிறது.
4.1 பில்லியன் டாலர்
இன்றைய சந்தை மதிப்பீட்டின் படி மொத்த 4.1 பில்லியன் டாலர் மத்தியிலான காட்ரிஜ் குழுமம் தற்போது இரண்டாக உடைய உள்ளது. இதில் ஒரு நிறுவனத்தை ஆதி காட்ரிஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் காட்ரிஜ் ஆகியோரும், மற்றொரு நிறுவனத்தை உறவினர் சகோதரர்களான ஜம்ஷித் காட்ரிஜ் மற்றும் ஸ்மிதா காட்ரிஜ் கிரிஸ்னா ஆகியோரும் நிர்வாகம் செய்ய உள்ளனர்.
இரண்டாகப் பிரிப்பு
காட்ரிஜ் குழுமத்தை இரண்டாகப் பிரிப்பதில் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் இதற்கான விவாதம் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஆதி காட்ரிஜ் மற்றும் நாதீர் காட்ரிஜ் ஆகியோர் சார்பாக ஆதி காட்ரிஜ் மகன் பைரோஜ்ஷா காட்ரிஜ் மற்றும் ஜம்ஷித் காட்ரிஜ் தலைமையில் பல நிர்வாகத் தலைவர்கள் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் காட்ரிஜ் கன்ஸ்யூமர், காட்ரிஜ் ப்ராபெர்டீஸ், காட்ரிஜ் இண்டஸ்ட்ரீஸ், காட்ரிஜ் அக்ரோவெட், ஏஸ்டெக் லைப்சையின்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் உள்ளது. இதோடு பட்டியலிடப்படாத Godrej & Boyce ஆகிய நிறுவனமும் உள்ளது.
காட்ரிஜ் தலைவர்கள்
இதில் பங்குச்சந்தையில் இருக்கும் காட்ரிஜ் குழும நிறுவனங்களை ஆதி காட்ரிஜ் மற்றும் நாதீர் காட்ரிஜ் நிர்வாகம் செய்து வரும் நிலையில், Godrej & Boyce ஜம்ஷித் காட்ரிஜ் நிர்வாகம் செய்து வருகிறார்கள். மேலும் இந்த 5 நிறுவனத்திலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5 பிள்ளைகள்
சமீபத்தில் காட்ரிஜ் குழுமத்தின் சேர்மன் பதவியில் இருந்து ஆதி காட்ரிஜ் பதவி விலகிய நிலையில் நாதீர் காட்ரிஜ் சேர்மன் பதவியைப் பெற்றுள்ளார். மேலும் ஆதி காட்ரிஜ்-ன் 3 பிள்ளைகளும், நாதீர் காட்ரிஜ்-ன் 2 பிள்ளைகளும் காட்ரிஜ் குழுமத்தின் நிறுவனத்தின் முக்கியப் பதவிகளில் உள்ளனர்.
Array
Godrej & Boyce நிறுவனத்தை ஜம்ஷித் காட்ரிஜ் நிர்வாகம் செய்து வரும் நிலையில் அவரது சகோதரி ஸ்மிதா காட்ரிஜ் கிரிஸ்னா நேரடி நிர்வாகப் பணிகளில் இல்லை. ஆனால் ஸ்மிதா காட்ரிஜ் கிரிஸ்னா-வின் கணவர் விஜய் கிரிஸ்னா மற்றும் மகள் நிரிகா ஹோல்கர் ஆகியோர் காட்ரிஜ் நிர்வாகக் குழுவில் உள்ளனர்.