கொரோனா பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 14ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டு லாக்டவுன் காலம் தற்போது மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு மக்களின் நலனுக்காக என்பதால் எவ்விதமான எதிர்ப்புமின்றி மக்கள் ஏற்றுக்கொண்டு வரும் நிலையில் சிலருக்கு மட்டும் இந்த லாக்டவுன் பெரிய பிரச்சனையாக உள்ளது.
ஆம், நம்ம ஊரு குடிமகன்கள் இந்த லாக்டவுன் நீட்டிப்பின் காரணமாக மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
மே 3 வரை
புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட புதிய வரைமுறை மற்றும் கட்டுப்பாடுகளில் மே 3ஆம் தேதி வரையில் இந்தியா முழுவதும் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குடி மகன்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்கள்
இந்தியாவில் பல மாநிலங்கள் மதுபான விற்பனையின் வாயிலாக அதிகளவிலான வருமானத்தை ஈட்டி வந்த நிலை, மாநில அரசும் மதுபான விற்பனையை அனுமதிக்க மத்திய அரசுக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்திவிட்டது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் மதுபானம், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என்றும், எச்சில் துப்பவும் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை 2005 சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது மத்திய அரசு.
ஹாட்ஸ்பார்ட்
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பிற்கு ஏற்றப்படி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வழிவகைச் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா ஹாட்ஸ்பார்ட் அல்லாத பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
அப்படித் தளர்வு செய்யப்பட்டால் மதுபான விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
மதுபான வருமானம்
மதுபான விற்பனையில் மூலம் கிடைக்கும் கலால் வரி மற்றும் சில மாநிலங்களில் விதிக்கப்படும் வாட் வரியின் மூலமாக மட்டுமே ஒரு வருடத்திற்கு மாநில அரசுகள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 30 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. மார்ச் 30 உடன் முடிந்த 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் மாநில அரசுகள் மது விற்பனை மூலம் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது.
மதுபான நிறுவனங்கள்
சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி மதுபான நிறுவனங்களான டியாஜியோ இந்தியா, பெர்நாட் ரிகார்டு, பீம் சன்டாரி, பகார்டி, ரெமி மார்டின் மற்றும் இதர மதுபான இணைந்து, லாக்டவுன் காலத்தில் தினமும் சில மணிநேரம் மட்டும் மதுபானங்களை விற்பனை செய்ய மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
ஆனால் தற்போது மத்திய அரசு அனுமதிக்க மறுத்திவிட்டது.
மக்களின் நிலை
மதுபானம் கிடைக்காத காரணத்தால் மக்கள் தற்போது நிலையான மனநிலையில் இல்லை. இதனால் பலர் போதைக்காகப் பல விபரீத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனாலேயே பலர் மரணம் அடைந்துள்ளது நாம் தினசரி செய்திகளில் பார்க்கிறோம்.