இந்தியப் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி பணவீக்கத்தின் காரணமாக அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கான பல முக்கியமான திட்டங்கள் கிடப்பில் போடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சேவை மிகவும் அவசியமாக இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகளால் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தொய்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கு சுமார் 20000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்புத் திட்டங்கள்
மத்திய அரசு அறிவித்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் மற்றும் மத்திய-மாநில மோதல்கள் காரணமாகச் சுமார் 1.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 116 உள்கட்டமைப்புத் திட்டங்களை முடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
116 திட்டங்கள்
மேலும், தற்போது நிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள 116 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு இதுவரையில் 20,311 கோடி ரூபாய் அளவிலான மூலதனச் செலவினம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 20,311 கோடி ரூபாய் அளவிலான செலவுகளுக்கு ஏற்ற திட்டங்களை முழுமையாக மூடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
20,311 கோடி ரூபாய்
இதன் மூலம் இந்த 116 திட்டங்கள் நிறுத்தப்பட்டவை, நிறுத்திவைக்கப்பட்டவை அல்லது முன்கூட்டியே அடைக்கப்பட வேண்டியவை பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனவே மத்திய அரசின் திட்ட கண்காணிப்பு அமைப்பில் இருந்து இவை அகற்றப்படலாம் என NITI ஆயோக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகப் பிஸ்னஸ் ஸ்டான்டர்டு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு நாட்டின் உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்தி அயோக்
மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அமைப்பின் அறிக்கையின் படி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 116 திட்டங்களில் பெரும்பாலானவை சாலை மற்றும் ரயில்வே துறை திட்டங்களாக உள்ளது.
முக்கியத் திட்ட விபரம்
50 திட்டங்கள் எப்போதோ ஒப்புதல் பெற்றவை உதாரணமாகச் சில திட்டங்கள் 48 வருடத்திற்கு முன்பு ஒப்புதல் பெற்றவை, 15 திட்டங்களுக்கும் இன்னும் ஒப்புதல் பெறவில்லை, 33 சாலை திட்டங்கள் மூடப்பட வேண்டியதாக உள்ளது.
ரயில்வே மற்றும் சாலை துறை
இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே மற்றும் சாலை - நெடுஞ்சாலை துறைக்கு இதுவரையில் இல்லாத தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது 20,311 கோடி ரூபாய் அளவிலான செலவுகளை எதிர்கொண்ட 116 திட்டங்கள் நிறுத்தப்படுவது மத்திய அரசுக்கு பெரும் இழப்பாக உள்ளது.
ரயில்வே திட்டங்களின் செலவுகள்
பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாகி வருவதால், அவற்றின் செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளது. முடங்கிக் கிடக்கும் ரயில்வே திட்டங்களின் செலவுகள் கடந்த சில ஆண்டுகளில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.88,373 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை, ரயில்வே துறையின் 72 திட்டங்களில் மொத்த மூலதனச் செலவு 8,500 கோடி ரூபாயாகும்.
சாலை திட்டங்களின் செலவுகள்
இதேபோல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளின் 33 திட்டங்கள் நீண்ட காலமாக முடங்கியுள்ளன. மேலும் இந்த 33 திட்டங்களின் செலவு 6 சதவீதம் உயர்ந்துள்ளது, இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கு ரயில்வே துறையை விட அதிகப்படியான செலவுகளை எதிர்கொண்டு உள்ளது, அதாவது 11,000 கோடி ரூபாய் செலவுகளை எதிர்கொண்டு உள்ளது.