கச்சா எண்ணெய் வளத்தின் மூலம் இன்று பணக்கார நாடுகளாக விளங்கும் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்-ல் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமான துறை, டாக்ஸி சேவை போன்றவற்றில் அதிகளவிலான மக்கள் வெளிநாட்டினர்.
அதிகச் சம்பளத்திற்காகவும், அதிகத் தேவையின் காரணமாகவும் குவைத் நாட்டில் தற்போது வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தான் வெளிநாட்டினர் வருகையைக் குறைக்க வேண்டும் வேலைவாய்ப்பைப் பிடுங்க வேண்டும் எனக் கூறும், ஆனால் முதல் முறையாக ஒரு வளைகுடா நாடு வெளிநாட்டினர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
தற்போது குவைத் நாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் மூலம் லட்ச இந்தியர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குவைத்
கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு குவைத் நாட்டில் வெளிநாட்டினர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என அந்நாட்டு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான முதல் குவைத் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பயத்தில் மூழ்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மக்கள் தொகை
குவைத் நாட்டில் இருக்கும் 48 லட்சம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34 லட்சம் பேர் வெளிநாட்டினர். அதாவது 70 சதவீதம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இந்நிலையில் குவைத் பிரதமர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், "வரும் காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளைச் சமாளிக்க, வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்
மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் மோசமான கச்சா எண்ணெய் வர்த்தகம் வாயிலாக 2020-21ஆம் நிதியாண்டில் குவைத் கிட்டத்தட்ட ஜிடிபி-யில் 45 சதவீத நிதி பற்றாக்குறை சந்திக்கும் அளவிற்கு மோசமாக உள்ளதாகக் குவை தேசிய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்கா
கடந்த 3 வருடமாகவே அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பதைத் தவிர்க வேண்டுமென வேலைவாயப்பை கொடுக்கும் நிறுவனங்கள் மீதும் வரியை உயர்த்தியது டிரம்ப தலைமையிலான அமெரிக்க அரசு.
இதைத் தாண்டி விசா கட்டணம் உயர்வு, கிரீன் கார்டு விண்ணப்பம் ஒப்புதலில் தொய்வு எனப் பல்வேறு நெருக்கடியை அமெரிக்கா உருவாக்கியது.
கொரோனா
ஒருபடி மேலாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கிய போது முதல் படியாக வெளிநாட்டினரைத் தான் குறிவைத்துப் பணிநீக்கம் செய்தது.
இதனால் இன்று பல ஆயிரம் இந்தியர்கள் குடும்பத்துடன் இந்தியா வருவதற்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
பிரிட்டன்
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கு முன் அமெரிக்காவில் இருந்த இதே பிரச்சனை இருந்தது. ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெற்றிகரமான பிரிந்த பிறகு வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்குக் கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் பிரச்சனை தணிந்துள்ளது.
ஆனால் இந்தக் கொரோனா தாக்கத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் வெளிநாட்டினர் பலரை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
குவைத்
வடக்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போலவே குவைத்-ம் தற்போது வெளிநாட்டினருக்குக் கடுமையான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் குவைத் சந்திக்கும் 45 சதவீத நிதி பற்றாக்குறை, வளைகுடாவில் அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வருகிறது.
சராசரியாக ஒவ்வொரு வளைகுடா நாடுகளும் 15 முதல் 25 சதவீதம் அளவிலான நிதிபாற்றாக்குறையைச் சந்திக்கும் நிலையில், செலவுகளைக் குறைக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் களத்தில் இறங்க வாய்ப்பு உண்டு இதனால் சவுதி, துபாய் ஆகிய நாடுகளிலும் வெளிநாட்டினரை வெளியேற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உண்டு.
இது மட்டும் நடந்தால் பல கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலை உருவாகும்.