இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி மற்றும் மென்பொருள் சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் இந்தியாவைத் தலைமையிடமாக வைத்து வெளிநாடுகளில் அதிகளவிலான வர்த்தக்தை செய்து வருகிறது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவை முக்கிய வர்த்தக இலக்காகக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.
அமெரிக்காவின் அதிபரான டிரம்ப் வெளிநாட்டு மக்களுக்கு வேலை கொடுப்பதில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகத்தைக் கொடுப்பதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், டிசிஎஸ் உட்பட அனைத்து இந்திய நிறுவனங்களும் அமெரிக்க வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க அரசுக்குச் சாதகமாகப் பல்வேறு முடிவுகளை அவசர அவசரமாக எடுத்தது.
அதில் முக்கியமான ஒன்று தான், அமெரிக்க அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை காட்டிலும் அதிகளவிலான அமெரிக்கர்கள் பணியில் அமர்த்துவது.
டிசிஎஸ்
கடந்த 5 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 20,000 அமெரிக்கர்களைத் தனது அமெரிக்க அலுவலகத்தில் பணி அமர்த்தியுள்ளது. இதன் மூலம் விசாவை அதிகளவில் நம்பியிருக்கும் நிலையில் இருந்தும், புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்க வர்த்தகத்தை இழப்பதில் இருந்தும் டிசிஎஸ் தப்பித்துள்ளது.
மேலும் கடந்த சில வருடங்களாக டிசிஎஸ் அமெரிக்க வர்த்தகத்தில் localisation programmes திட்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளதாக 2019-20ஆம் நிதியாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெலிவரி மாடல்
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் டெலிவரி மாடல் கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மாற்றப்பட்டு உள்ளதாகவும், உலகளவில் இருக்கும் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றும் புதிய Location Independent Agile முறை, co-location தேவையைக் குறைத்துள்ளது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
நம்பர் 1
கடந்த 5 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 20,000 அமெரிக்கர்களைப் பணியில் சேர்த்தது மூலம், அமெரிக்காவின் ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் துறையில் அதிக வேலைவாய்ப்பைக் கொடுத்த நிறுவனங்களில் டிசிஎஸ் முதல் இடத்தில் உள்ளது.
2.5 மடங்கு அதிக ஊழியர்கள்
ஒவ்வொரு வருடமும் சில 100 கல்லூரி மாணவர்களை மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டுப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுப்போம். ஆனால் 2020ஆம் நிதியாண்டில் பணியில் சேர்க்கப்பட்ட பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திப்பதிலும், வேலைத் திறனை அதிகரிப்பதிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் குறுகிய காலத் திட்டங்களுக்குக் கான்டிராக்ட் முறையைத் தேர்வு செய்கிறோம் என டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் குளோபல் HR - Head மிலிந்த் லாகாட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகம்
டிசிஎஸ் நிறுவனம் 2019-20ஆம் நிதியாண்டில் 1,56,949 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது, இதில் 52.2 சதவீதம் அமெரிக்க வர்த்தகத்தில் இருந்து கிடைத்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் மூலம் 30.6 சதவீதமும், இந்தியாவில் இருந்தும் 5.7 சதவீதமும், மீதமுள்ள நாடுகளில் இருந்து 11.5 சதவீத வருவாய் கிடைத்துள்ளது.
52 சதவீத வருவாயைக் காப்பாற்றிக்கொள்ளவே டிசிஎஸ் அதிகளவிலான அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.
இந்தியர்களின் கனவு
ஒவ்வொரு இந்திய ஐடி ஊழியர்களின் கனவாக இருக்கும் அமெரிக்க வேலை, இனி அதிகமானோருக்குச் சாத்தியம் இல்லை என்பது டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகளால் தெரிகிறது.
அமெரிக்கர்கள் அதிகளவில் பணியில் அமர்த்தும் வேலை டிசிஎஸ் மட்டும் செய்யவில்லை, இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் என அனைத்து இந்திய ஐடி நிறுவனங்களும் செய்கிறது.