உலகம் முழுவதும் அனைத்து முன்னணி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் வேளையில், இது நாள் வரையில் இந்தியாவின் முன்னணி 4 ஐடி சேவை நிறுவனங்களும் எவ்விதமான பணிநீக்கத்தையும் அறிவிக்காமல் இருப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், அனைவரையும் பீதியில் வைத்திருக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.
இந்த நிலையில் நீண்ட காலமாகப் பணிநீக்கம் குறித்து வாயை திறக்காமல் இருந்து கூகுள் நேற்று 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டெக் ஊழியர்களை உண்மையிலேயே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் விப்ரோ நேற்று 500 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் விப்ரோ இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.
விப்ரோ
ஜனவரி 20 ஆம் தேதி வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து விப்ரோ கொடுத்த விளக்கத்தின் படி நிறுவனத்தின் பணியில் சேர்க்க ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட நிலையிலும், பணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் 452 பிரஷ்ஷர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
பிரஷ்ஷர்
பொதுவாக ஒரு ஐடி நிறுவனத்தில் பிரஷ்ஷராகப் பணியில் சேரும் போது குறித்த தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுப் பணியில் சேர்க்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்கள் கொடுக்கும் பயிற்சியில் எந்த அளவுக்கு இந்தப் பிரஷ்ஷர் மாணவர்கள் மேம்படுகிறார்கள், திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை அவ்வப்போது தேர்வுகள் வைத்துச் சரி பார்க்கப்படும்.
ஆஃபர் லெட்டர்
அப்படி ஆஃபர் லெட்டர் பெற்ற பிரஷ்ஷர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தேர்வுகள் மூலம் ஆய்வு செய்தபோது தொடர்ந்து குறைவான மதிப்பீட்டைப் பெற்று வந்த காரணத்தால் பணியில் சேர்க்கும் முன்பே 452 பேருக்கான ஆஃபர் லெட்டர் திரும்பப் பெறப்பட்டு உள்ளது.
விப்ரோ விளக்கம்
விப்ரோ நிறுவனத்தில் பணியில் சேரும் அனைத்து ஊழியர்களும் குறிப்பிட்ட அளவிலான திறன்களைக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் முயற்சியில் ஒரு பகுதி சோதனையில் இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என விப்ரோ விளக்கம் கொடுத்துள்ளது.
75000 ரூபாய் செலவு
இதேவேளையில் இந்த 452 பிரஷ்ஷர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தலா ஒருவருக்கு 75000 ரூபாய் செலவு செய்துள்ளது, இதை விப்ரோ நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளதாகத அறிவித்து 452 பேருக்கு அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு ஆஃபர்களைத் திரும்பப் பெற்றுள்ளது.
டாப் 4 ஐடி சேவை நிறுவனங்கள்
சமீப காலமாகவே இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களும் பிரஷ்ஷர்களுக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களைத் திரும்பப் பெறுவதும், பணியில் சேரும் நாள்-ஐ அறிவிக்காமல் பலமாதங்களாகத் தாமதப்படுத்தி வந்தது, இதைப் பெரும்பாலான நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டு இருந்தது. இதில் முக்கியமாகப் பல அனுபவமான ஊழியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
5 வாரம் PRP பயிற்சி திட்டம்
இந்த நிலையில் தற்போது விப்ரோ அதிகாரப்பூர்வமாகப் பிரஷ்ஷர்கள் செயல்திறன் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு பணி நியமனத்தைத் திரும்பப் பெற்று வருகிறது. பிரஷ்ஷர்களின் ஆன்போர்டிங் பிரச்சனையைச் சரி செய்யவே விப்ரோ நிர்வாகம் 5 வாரம் Project Readiness Program (PRP) திட்டத்தை உருவாக்கியது, இந்தப் பயிற்சி மற்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.