இந்திய நிறுவனங்களில் ஜூனியர் மற்றும் சீனியர் ஊழியர்கள் மத்தியிலான அதிகப்படியான சம்பள வித்தியாசத்திற்கு அடிப்படை காரணம் தேவைக்கு அதிகமாக இன்ஜினியர்கள் உருவாக்கப்படுவதும், அவர்கள் போதுமான திறன்கள் இல்லாமல் இருப்பதும் தான்.
4 வருடம் இன்ஜினியரிங் படித்து முடித்துக் கல்லூரியை விட்டு வெளியில் வரும் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் வேலைவாய்ப்பு சந்தையை எதிர்கொள்ளப் போதுமான திறன் இல்லாதது, அதிகப்படியான போட்டி, குறைவான வாய்ப்புகள், கல்விக் கடன் சுமை ஆகியவற்றின் மூலம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் 4 வருடம் இன்ஜினியரிங் படித்து முடித்து ஒரு வேலையை வாங்குவது என்பது பெரும் கனவாக இந்தப் போட்டி உலகில் மாறியுள்ளது. இது இந்தியாவில் பெரும்பாலான பட்டதாரிகளின் நிலை என்றால் மிகையில்லை.
பாக்கெட் ஓட்டை
முதல் வேலையைப் பெற்றாலும் பெரிய நகரங்களுக்குப் போதுமான சம்பளத்தில் வேலை கிடைப்பது என்பது அரிதாக உள்ளது. வாடகை, போக்குவரத்து, தனிப்பட்ட செலவுகள் எனப் பல விஷயத்தில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதால் வாய்ப்பு கிடைக்கும் இடம் அனைத்திலும் வருமானத்தைப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
பணத்தைத் தேடி ஓட்டம்
இதனால் டெக் துறையில் மட்டும் அல்லாமல் அனைத்து துறையிலும் இளம் தலைமுறையினர் பணியில் சேர்ந்த உடனே புதிய தொழில்நுட்பம் கற்றுக்கொண்டும், திறன்களை வளர்த்துக் கொண்டும், ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் புதிய வேலையில் சேரும் வழக்கத்தைப் பொரும்பாலானர்வர்கள் கொண்டு உள்ளனர்.
ப்ரீலான்சிங் பணிகள்
இந்த நிலையில் இந்தியாவில் ப்ரீலான்சிங் பணிகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதேபோல் ப்ரீலான்சிங் பணியில் அதிகப்படியான வருமானமும் கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் தற்போது moonlighting மற்றும் quiet quitting கலாச்சாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
அவினாஷ் ஜோஷி
இந்த நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என NTT DATA நிறுவனத்தின் இந்திய கிளையின் சிஇஓ-வான அவினாஷ் ஜோஷி கூறுகையில், இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் moonlighting ஆதரிக்க வேண்டும். ஊழியர்கள் சிலர் விருப்பத்திற்காகவும், சிலர் தேவைக்காகவும் ஓரே நேரத்தில் இரண்டு அல்லது 3 நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
இதுதான் தீர்வு
இதனால் இந்திய நிறுவனங்களும் கவனிக்க வேண்டியது ஒரேயொரு விஷயம் தான் conflict of interest, அதாவது ஊழியர்கள் வேலை செய்யும் 2வது நிறுவனத்திற்கும், முதல் நிறுவனத்திற்கும் ஏதேனும் முரண்பாடு உள்ளதா என்பது தான். ஓரே துறை, ஓரே கிளையின்ட், தகவல் கசிவு, வர்த்தக ரகசியங்கள் பரிமாற்றம் போன்றவை நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவினாஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
சம்பள கேப்
இதைத் தாண்டி ஊழியர்களுக்குக் கூடுதலாகவோ அல்லது இரண்டுக்கும் அதிகமான நிறுவனத்தில் பணியாற்ற மிக முக்கியமான காரணம் இந்திய நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும், கீழ் மட்ட அதிகாரிகளுக்கும் மத்தியிலான சம்பளத்தில் இருக்கும் வித்தியாசம் தான்.
இன்போசிஸ்
உதாரணமாக இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் சிஇஓ சம்பளம் 10 வருடத்திற்கு முன்பு வருடம் 80 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்ற நிலையில், 2022ஆம் நிதியாண்டில் 79.75 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் பிரஷ்ஷர்களின் சம்பளம் கடந்த 10 வருடத்தில் 2.75 லட்சம் ரூபாயில் இருந்து 3.6 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
பிரஷ்ஷர்கள்
இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் பிரஷ்ஷர்கள் கடந்த 10 வருடமாக அவர்களுக்கான சம்பளத்தை அளிக்கப்படாமல் சுரண்டப்படுகின்றனர் என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கோகன்தாஸ் பாய் ஆகஸ்ட் மாதம் பேசியது மறக்க முடியாது.
டாப் சிஇஓ சம்பளம்
2022 ஆம் ஆண்டுக்கு HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜய்குமார் ஆண்டுக்கு ரூ.123 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்-ன் சம்பளம் 88 சதவீதம் உயர்ந்து, 42 கோடி ரூபாயில் இருந்து 79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் 79.8 கோடி ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார்.
15 வருட ஏமாற்றம்
ஆனால் பிரஷ்ஷர்கள் கடந்த 15 வருடத்திற்கு முன்பும் 21,000 முதல் 30,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது, இப்போதும் இதே நிலையில் தான் சராசரியாகச் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பணவீக்கம், சம்பளத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இது தான் தற்போது moonlighting மற்றும் quiet quitting கலாச்சாரம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது.