இந்தியா ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் கடந்த 15 வருடத்தில் வியக்கவைக்கும் அளவிற்குப் பல மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இதே ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது
அதிலும் குறிப்பாகப் பிரஷ்ஷர்களின் சம்பளம் கடந்த 10 வருடத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே 3 முதல் 3.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் ப்ரீலான்சிங் முறையில் அதிகப்படியான டெக் பணிகள் வருகிறது.
இதை இந்தியா ஐடி நிறுவனங்கள், தனது ஊழியர்கள் கூடுதல் வருமானத்திற்காகச் செய்வதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏற்கனவே விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கையும் விடுத்துள்ள நிலையில் தற்போது ஐபிஎம் நிறுவனமும் சேர்ந்துள்ளது.
ஐபிஎம்
இந்தியாவில் அடுத்தடுத்து அலுவலகத்தை விரிவாக்கம் செய்தும், ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ஐபிஎம் தனது ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை உடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இன்போசிஸ்
இந்த அறிவிப்பு மூலம் ஏற்கனவே ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் சரி, புதிதாகச் சேர உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் இன்போசிஸ் வெளியிட்ட அறிவிப்பால் ஐடி நிறுவனங்கள் தடுமாறிய நிலையில் தற்போது ஐபிஎம் வெளியிட்ட அறிவிப்பு ஐடி நிறுவனங்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
மூன்லைட்டிங்
மூன்லைட்டிங் செய்வதை இதுநாள் வரையில் இந்தியா ஐடி நிறுவனங்கள் மட்டுமே எதிர்த்து வந்த நிலையில், தற்போது அமெரிக்க டெக் நிறுவனமான ஐபிஎம் எதிர்த்து அறிவிப்பை வெளியிட்டு இருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மூன்லைட்டிங் குறித்து ஐபிஎம் உயர் தலைவர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
ஐபிஎம் நிலைப்பாடு
ஐபிஎம்-ல் எப்போதும் எங்கள் நிலைப்பாடு தெளிவாக இருக்கும், ஒவ்வொரு ஐபிஎம் ஊழியர்களும் தங்களது முழுமையான திறனையும், மனத்தையும் பணியில் காட்ட வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறோம். இதேவேளையில் உங்கள் கலை, நடனம் அல்லது இசை மீதான ஆர்வத்தை ஐபிஎம் நிறுவனத்தில் கொண்டாடப்படுகிறது....
சந்தீப் பட்டேல்
ஆனால் அதே உணர்வில், உங்கள் ஆர்வங்கள் ஐபிஎம் நிறுவனத்தின் நலன்களைப் பாதித்தாலோ அல்லது இழப்பை ஏற்படுத்தினாலோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்களது தனிப்பட்ட ஆர்வத்தை முன்னெடுத்தாலோ அது தீவிரமான பிரச்சனைக்கும், நம்பிக்கையை மீறுவதாகவும் கருதப்படுகிறது என ஐபிஎம் இந்தியா நிர்வாகத் தலைவர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
சந்தீப் பட்டேல் மூன்லைட்டிங் குறித்துப் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில் ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நோ மூன்லைட்டிங்
மேலும் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது இரண்டாவது வேலை, பார்ட் டைம் வேலை, கான்டிராக்ட் வேலை போன்றவற்றில் ஈடுபட்டால் கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐபிஎம் இந்தியா நிர்வாகத் தலைவர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி தொடர்ந்து இன்போசிஸ்
இந்தியாவில் ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனம் மட்டுமே தனது ஊழியர்கள் ப்ரிலான்சிங் வேலையை தேர்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனால் இரு நிறுவனங்களும் 2வது வேலையை தேர்வு செய்யும் போது நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையை வைத்துள்ளது. இதை மீறும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளது.