இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பஞ்சாயத்து 1960-களிலேயே தொடங்கிவிட்டது. ஒரு சில போருக்குப் இரண்டு பெரிய நாடுகளை ஒருவரை ஒருவர் இணக்கமாகப் பார்த்துக் கொள்ளவில்லை. புகைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது. இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக வலுவாக வளரத் தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கம் உலக அளவில் விஸ்தாரமாக பரந்து விரிந்து கொண்டு இருக்கிறது. உதாரணம் BRI - Belt and Road Initiative திட்டத்தைச் சொல்லலாம். இதில் இந்தியா உடனும் பல இடங்களில் நேரடியாக உரசத் தொடங்கியது.
உதாரணமாக, தோக்லம் பிரச்சனையில், இந்தியாவை சீனா நேரடியாகவே எதிர்த்தது. கடைசியில் லடாக் பிரச்சனையில் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது.
கல்வான் பள்ளத்தாக்கு
கடந்த ஜூன் 2020-ல், இந்தியாவின் வட கோடி பகுதிகளில் ஒன்றான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலால், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்திய ராணுவத்தினரின் தாக்குதலில், சீன ராணுவத்தினர்களும் மரணித்தார்கள். இத்தனை காலமாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனை, இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்தால் தீ பற்றி எரியத் தொடங்கியது. மக்கள் மத்தியிலும் சீன புறக்கணிப்பு உணர்வு பொங்கத் தொடங்கியது.
முரட்டு பதிலடி
இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு, தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில், அடுத்தடுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து சீனாவையே வருத்தப்பட வைத்தது. அதே போல சீனாவில் இருந்து, இறக்குமதி செய்யப்படும் சோலார் உபகரணங்களுக்கு கூடுதல் வரி விதித்து இருக்கிறது. இந்திய ரயில்வேஸ் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து இருக்கிறது.
சீன இறக்குமதி
இது எல்லாம் போதாது என, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறைக்க, பி ஐ எஸ் அமைப்பு பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தரத்தை நிர்ணயிக்கும் வேலையில் இருக்கிறார்கள். இந்த புதிய பி ஐ எஸ் தர நிர்ணயங்கள் அமலுக்கு வந்தால், எப்படியும் சீன இறக்குமதிகள் அதிகம் அடி வாங்கும் என்று கூட பி ஐ எஸ் தரப்பில் இருந்து சொல்லி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ ரூட்டிங் (Re-routing)
இப்போது, சீன இறக்குமதிகளை நேரடியாக குறைப்பது மட்டும் இன்றி, மறைமுகமாக சீனாவில் இருந்து, ரீ ரூட்டிங் (Re-routing) முறையில் இந்தியாவுக்குள் வரும் இறக்குமதிகளையும் தடுக்க, மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதுவும் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ரீ ரூட்டிங் (Re-routing) செய்யப்பட்டு வருவதை தடுக்க பல நடவடிக்கைகளை அலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
அது என்ன ரீ ரூட்டிங் (Re-routing)
ஒரு நாட்டில் தயாரான பொருள், அந்த நாட்டில் இருந்து நேரடியாக மற்ற நாடுகளுக்கு போகாமல், இடையில் வேறு சில நாடுகள் வழியாக, மற்ற நாடுகளுக்கு போகும்.
உதாரணத்துக்கு சீனாவில் உற்பத்தியான பொருட்கள், கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்தியாவுக்கு நேரடியாக வராது. ஆனால், சீன பொருட்கள் தைவான் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு விற்பார்கள். தைவான் இந்தியாவுக்கு விற்கும். ஆக கடைசியில் சீன பொருளைத் தான் நாம் தைவானிடம் இருந்து வாங்கி இருப்போம். இதைத் தான் ரீ ரூட்டிங் (Re-routing) என்கிறோம்.
தடுப்பு நடவடிக்கை ஆலோசனைகள்
இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் தரத்தை உயர்த்துவது,
இறக்குமதி அளவை கட்டுப்படுத்துவது,
விவரங்களை கட்டாயமாக வெளிப்படையாகத் தெரியப்படுத்துவது (mandate stringent disclosure norm),
ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறைய துறைமுகங்களில் அடிக்கடி சோதனை செய்வது... போன்றவைகளை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
டார்கெட் இவைகள் தான்
அடிப்படை உலோகங்கள் (Base Metals), எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள், லேப்டாப் & ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள், ஃபர்னிச்சர்கள், லெதர் பொருட்கள், பொம்மைகள், ஆடைகள், ஏசி இயந்திரங்கள் & டிவி போன்றவைகளைத் தான் தற்போது டார்கெட்டாக வைத்திருப்பதாக ஒரு அதிகாரி சொல்லி இருக்கிறார். சமீபத்தில் தான், டிவி-க்களை இறக்குமதி செய்ய தனி உரிமம் பெற வேண்டும் எனச் சொன்னது நினைவில் இருக்கலாம்.
பாதிக்கப்படுவார்கள்
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சீன பொருட்களை தடுக்க வேண்டும், சீனாவுக்கு வர்த்தக ரீதியாக ஒரு அடி கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் இந்தியாவின் சுய சார்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்கிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற Association of Southeast Asian Nations (Asean) உறுப்பு நாடுகள் பாதிக்கப்படுமாம்.
வரி விதிப்பது போதாது
ஒரு பொருளின் மீது கூடுதல் வரி விதிப்பது எல்லாம் ஓரளவுக்கு தான் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் தான் தற்போது பொருட்களின் தரத்தை அதிகரிக்கிறார்களாம். அதோடு FTA வழியாக வரும் பொருட்கள், உண்மையாகவே, அந்தந்த நாடுகளில் இருந்து தான் வருகிறதா என்பதை எல்லாம் உறுதிப்படுத்த இருக்கிறார்களாம். எனவே சுங்க வரித் துறையினர் மேலும் உஷாராக இருப்பார்களாம்.
மதிப்பு கூட்டல் அளவு
ஒரு பொருளை வாங்கி, அதை அப்படியே மற்ற நாடுகளுக்கு அனுப்பினால் அதை வர்த்தகம் என்போம். அதில் சில மதிப்பு கூட்டல் நடவடிக்கைகளைச் செய்து விற்றால் அதை ஒரு புது வியாபாரம் எனலாம். அப்படி, மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு கூட்டல் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க இருக்கிறார்களாம்.
சீனாவுக்கு நஷ்டம்
இந்தியா உடன் அதிகம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு 2-வது இடம். கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 81.8 பில்லியன் டாலருக்கு வியாபாரம் செய்து இருக்கிறோம். அதில் 16.60 பில்லியன் டாலர் ஏற்றுமதி, 65.2 பில்லியன் டாலர் இறக்குமதி செய்து இருக்கிறோம். இப்போது இந்தியா எடுக்கும் அதிரடி நடவடிகைகளால், சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் 65 பில்லியன் டாலர் வியாபாரமும் ரிஸ்கில் இருக்கிறது. இதில் எத்தனை பில்லியன் டாலர் நஷ்டத்தை சீனா சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.