முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்கமுடியாது.
குறிப்பாக இந்திய மாம்பழங்களுக்கு உலக வர்த்தக சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதும் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் மாம்பழ தந்தை என்று அழைக்கப்படும் 82 வயதான கலீம் உல்லா கான் என்பவர் பல வருடங்களாக தனது தோட்டத்தில் வெவ்வேறு வகை மாம்பழங்களை விளைச்சல் செய்து சாதனை செய்துள்ளார். அவரைப் பற்றி தற்போது பார்ப்போம்.
இந்தியாவின் மாம்பழ தந்தை
லக்னோவை சேர்ந்த 82 வயதான கலீம் உல்லா கான் தனக்கு சொந்தமான மாந்தோட்டத்தில் பல்வேறு வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். குறிப்பாக தனது 120 வருட பழமையான மா மரத்தைப் பார்க்க தினமும் ஒரு மைல் அவர் நடந்து செல்கிறார். பல ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட வகையான பழங்களை விளைவித்துள்ளதால் அவர் இந்தியாவின் மாம்பழ தந்தை என அழைக்கப்படுகிறார்.
உலகின் மிகப்பெரிய மாம்பழ கல்லூரி
லக்னோவில் உள்ள மலிஹாபாத் என்ற சிறிய நகரத்தில் உள்ள தனது பழத்தோட்டம் குறித்து கலீம் கூறுகையில், "பல வருடங்களாக கொளுத்தும் வெயிலில் கடினமாக உழைத்ததற்காக எனது பரிசு இது' என்றார். சாதாரண கண்ணுக்கு இவை எல்லாம் வெறும் மரங்கள் என்றும், ஆனால் மனதில் ஆழத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு அற்புதம் என்றும், இதை நான் உலகின் மிகப்பெரிய மாம்பழக் கல்லூரி என்றே கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இளைஞனாக முதல் பரிசோதனை
பள்ளிப்படிப்பை சில காரணங்களால் சிறு வயதிலேயே நிறுத்தியவுடன் புதிய மாம்பழ வகைகளை உருவாக்குவதற்கும், தாவர பாகங்களை ஒட்டுதல் அல்லது இணைத்தல் ஆகியவற்றில் பல பரிசோதனைகளை தான் செய்ததாகவும் கான் கூறியுள்ளார். மேலும் இளைஞனாக இருக்கும்போதே மாம்பழ உற்பத்தியில் சாதனை செய்ய வேண்டும் என்ற இலக்கு தனக்கு இருந்ததாகவும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கலீம் கூறியுள்ளார்.
120 ஆண்டு பழமையான மரம்
கலீமின் மாம்பழ தோட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மாம்பழங்களின் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சுவை, அமைப்பு, நிறம் மற்றும் அளவு மாறுபடும் என்று அவர் கூறினார். குறிப்பாக அவரது தோட்டத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான மாமரத்தை அவர் பாதுகாத்து வருவது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யாராய் பெயரில் மாம்பழம்
கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின் நினைவாக அவர் 'ஐஸ்வர்யா' என்று தான் கண்டுபிடித்த ஒருவகை மாம்பழத்திற்கு பெயரிட்டார். இன்றுவரை இந்த மாம்பழ வகை அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது. ஐஸ்வர்யாராய் போலவே இந்த மாம்பழம் மிக அழகு என்றும், ஒரு மாம்பழத்தின் எடை ஒரு கிலோகிராம் என்றும்,அதன் வெளிப்புற தோல் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்றும், மேலும் சுவை மிகவும் இனிமையானது" என்று கான் கூறினார்.
மோடி, சச்சின் பெயரிலும் மாம்பழங்கள்
ஐஸ்வர்யாராய் மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் நினைவாகவும் அவர் தான் கண்டுபிடித்த மாம்பழ வகைகளுக்கு பெயரிட்டுள்ளார். கான் கண்டுபிடித்த இன்னொரு வகை மாம்பழத்தின் பெயர் அனார்கலி. வாசனை, சுவை ஆகியவற்றில் இது மிகவும் பிரபலம் என்று கூறியுள்ளார்.
எட்டு குழந்தைகளின் தந்தை
எட்டு குழந்தைகளின் தந்தையான கலீம் உல்லா கான் தனது மாம்பழங்கள் குறித்து கூறியபோது, 'மக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் மாம்பழங்கள் என்றென்றும் இருக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகும், சச்சின் மாம்பழத்தை மக்கள் சாப்பிடும் போதெல்லாம், கிரிக்கெட் ஹீரோவை மக்கள் நினைவில் கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.