பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரலாறு காணாத அளவிற்கு இந்த வருட பட்ஜெட் இருக்கும் எனத் தெரிவித்தது, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகளவிலான வரிச் சலுகை, முதலீட்டு வாய்ப்பு, வட்டி உயர்வு ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ஜெட் அறிக்கை இந்தியா பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவினாலும், தற்போது உடனடியாகச் சலுகை மற்றும் தளர்வுகளை எதிர்பார்த்த நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்டுள்ள மிடில் கிளாஸ் பிரிவை இந்தப் பட்ஜெட் ஏமாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
வருமான வரிச் சலுகை
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் மத்தியில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு எவ்விதமான வருமான வரி சலுகையும் அளிக்கவில்லை. இப்பிரிவுக்கு வருமான வரிச் சலுகை அளித்திருந்தால் இந்தியாவில் உடனடியாக டிமாண்ட் அதிகரித்திருக்கும் என்பது பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
75 வயதுக்கு மேற்பட்டோர்
கொரோனா பாதிப்பால் அதிகளவில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்த 20 முதல் 50 வயதுடைய மக்களுக்குச் சலுகை அளிக்காமல், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது மிடில் கிளாஸ் மக்களைக் காயப்படுத்தியுள்ளது.
சுருக்கமாக இந்தப் பட்ஜெட்டில் உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான சலுகையும் அளிக்கப்படவில்லை.
GIG எகானமி
மேலும் இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள GIG எகானமியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், அவர்களின் வருமானம் பிற துறை ஊழியர்களின் சம்பள அளவை கூடப் பெறமுடியாமல் இருப்பதைக் கவனிக்கத் தவறியுள்ளது.
ஈபிஎப், விபிஎப் மற்றும் யூலிப் திட்டம்
இந்திய ஊழியர்கள் தங்களது வருமானத்தை வரி சேமிப்புக்காக ஈபிஎப், விபிஎப் மற்றும் யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் நிலையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் இந்தத் திட்டத்தில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக முதலீடு
இதுகுறித்த கேள்விக்கு வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பான்டே கூறுகையில், ஈபிஎப் திட்டத்தில் அதிகம் முதலீடு செய்பவர்களை மட்டுமே குறித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சுங்க வரி உயர்வு
மேலும் மிடில் கிளாஸ் மக்கள் வாங்கும் பல பொருட்களின் மீதான சுங்க வரியை மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கார் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது, இது மறைமுகமாக மிடில் கிளாஸ் மக்களையே பாதிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை
இவை அனைத்திற்கும் தாண்டி மிடில் கிளாஸ் மக்கள் தினமும் பயன்படும் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் வகையில் 2.5 சதவீதம் அக்ரி இன்பரா செஸ் விதித்துள்ளது. இதேவேளையில் சுங்க வரி குறைக்கப்பட்டு உள்ளதால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.