கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட தோல்வியையே சந்தித்து வருகின்றன. இன்று வரையில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையே நிலவி வருகிறது.
இதற்கிடையில் பல நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்தினை நோக்கி பாய்ந்து கொண்டு இருக்கின்றன.
இது இப்படி இருந்தாலும், முதல் முதலாக கொரோனாவினை பரப்பிய சீனாவோ தற்போது இயல்பாய் உள்ளது. இதுதான் இன்று பலரின் சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது.
இந்தியா கவர்ந்திழுக்க முயற்சி
கொரோனாவில் பெய்ஜிங்கிற்கும் பங்கு உள்ளது என தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகின்றார். இந்த நிலையில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேற முயல்வதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் அந்த நிறுவனங்களை இந்தியா கவர்ந்திழுக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு வர விருப்பம்
குறிப்பாக மருத்துவ நிறுவனமான Abbott Laboratories நிறுவனம் கூட அங்கிருந்து வெளியேற நினைப்பதாகவும் லைவ் மிண்ட் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், சலுகைகளை பெற விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எந்தெந்த துறைகள்?
மருத்துவ உபகரணங்கள் சப்ளையர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் பிரிவு, ஜவுளி, தோல் மற்றும் கார் பகுதி தயாரிப்பாளர்களுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மூத்த அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் உலகளவில் பல லட்சம் மக்களை காவு வாங்கியுள்ள கொரோனாவினை, சீனா கையாண்டதற்காக அதன் வர்த்தக நடவடிக்கைகளில் சிலவற்றை இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகம் பாதிக்கலாம்
இதற்கிடையில் உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நாடான சீனாவில் இருந்து நிறுவனங்கள் வெளியேறும் பட்சத்தில், உலகளாவிய வர்த்தக நடவடிக்கையே பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவினைப் போல ஜப்பானும், அமெரிக்காவில் இருந்து தனது நிறுவனங்களை மாற்ற 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகள் கூட சீனாவினை நம்ப்வதை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ நிறுவனங்கள் ஆர்வம்
இந்த நிலையில் இந்தியாவுக்கு வர ஆலோசிக்கும் நிறுவனங்களில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மெட்ரானிக் பிஎல்சி மற்றும் அபோட் ஆய்வகங்களுடன் தங்களது ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே உள்ள மருந்து நிறுவனங்கள்
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் மெட்ரானிக் பிஎல்சி மற்றும் அபோட் ஆகிய இரு நிறுவனங்களும், இந்தியாவில் ஏற்கனவே இருப்பதால், அதன் விநியோக சங்கிலி பாதிக்கப்படாமல், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதை எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா, ஜப்பானுக்கு அந்த நிறுவனங்கள் திரும்பினாலும், சீனாவோடு ஒப்பிடும்போது செலவுகள் அதிகம் தானாம்.
இந்தியாவில் செலவுகள் குறைவு
ஆனால் அதே நேரம் இந்தியாவில் செலவுகள் குறைவு தானாம். எனினும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் குறித்த சில குறிப்பிட்ட கோரிக்கைகளை இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசினை பொறுத்தவரையில், கொரோனாவினை பொறுத்த வரையில், எட்டு வார நாடு தழுவிய ஊரடங்கினால், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டிய அவசியம்
அதோடு, 2022ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறையினை 25% ஆக உயர்த்த இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் 122 மில்லியன் மக்களை வேலையில்லா நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படும் நிலையில், வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது, அதிகமாக உள்ளது.