மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மே 13 முதல் மே 17 வரை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டர்.
இந்த திட்டத்தின் மதிப்பு சுமாராக 20 லட்சம் கோடி ரூபாய் என அரசு தரப்பில் சொன்னார்கள். அதோடு ஒட்டு மொத்த நிதிய ஜிடிபியில் 10 % எனவும் சொன்னார்கள்.
ஆனால், இது 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டம் எல்லாம் கிடையாது. அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் 10 % எல்லாம் கிடையாது என பலரும் பல தரப்பிலான கருத்துக்களைச் சொன்னார்கள்.
ப சிதம்பரம்
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், தன் ட்விட்டர் பக்கத்தில் "பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்" என ட்விட் செய்து இருந்தார்.
ஜிடிபி கணிப்பு
உலக வங்கியின் தரவுகள் படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமாராக 202 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்தியா, அதில் 10 சதவிகிதத்தை, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல திட்டங்களை அறிவித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ப சிதம்பரத்தின் கணக்குப் படி 1.86 லட்சம் கோடியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், மேலே சொன்ன கணக்கில் 1%-க்கும் குறைவாகத் தான் வருகிறது.
தரகு நிறுவனங்கள் & வங்கிகள்
ப சிதம்பரத்தைத் தொடர்ந்து, தற்போது கோல்ட் மேன் சாக்ஸ், மோதிலால் ஓஸ்வால், ஃபிட்ச், எஸ்பிஐ, எடல்வீஸ், பார்கலேஸ் என பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்களில் எவ்வளவு ரூபாய் நிதி உதவி (Fiscal Cost) செய்து இருக்கிறார்கள், அது இந்திய ஜிடிபியில் எத்தனை சதவிகிதம் என கணித்து இருக்கிறார்கள்.
வெளிநாடு
கோல்ட்மேன் சாக்ஸ் - 1.3 %
யூ பி எஸ் - 1.2 %
பேங்க் ஆஃப் அமெரிக்கா - 1.1 %
ஃபிட்ச் - 1.0 %
ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் - 1.0 %
எடல்வீஸ் - 0.84 %
சி எல் எஸ் ஏ - 0.8 %
பார்கலேஸ் - 0.75 % என, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் இவ்வளவு தான், இந்திய அரசு நிதி உதவி (Fiscal Cost) அறிவித்து இருப்பதாக பல சர்வதேச தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தோரணம் கட்டி தொங்கவிட்டு இருக்கிறார்கள்.
உள்நாடு
சரி, வெளிநாட்டுக்காரர்கள் தான் ஏதோ கோபத்தில் இருக்கிறார்கள் போல. உள்நாட்டு தரகு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்ன சொல்கிறது எனப் பார்த்தால் அதங்கும் அதே கதை தான். மோதிலால் ஓஸ்வால் - 1.3 %
கோட்டக் - 1.0 %
எஸ்பிஐ - 1.0 % இவ்வளவு தான் மத்திய அரசு, மொத்த இந்திய ஜிடிபியில் கொரோனாவுக்கான நிதி உதவியாக (Fiscal Cost) செய்து இருக்கிறார்கள் என போட்டு உடைத்துவிட்டார்கள்.
பழைய கதை
மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டங்களில், பல அறிவிப்புகள் மற்றும் சில நிதி உதவித் திட்டங்கள் முன்பே அறிவித்தவைகள் தான். உண்மையாகவே கொரோனாவுக்காக அறிவித்த நிதி திட்டங்கள், இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 1 % தான் எனச் சொல்லி இருக்கிறது ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம்.
எஸ்பிஐ
நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்கள், இந்திய பொருளாதாரத்தில்,குறுகிய காலத்தில், நுகர்வை பெரிதாக அதிகரிக்க உதவாது. அரசின் அறிவிப்புகளாலும், திட்டங்களாலும், இந்திய பொருளாதாரத்தில் நேரடியாக, சுமார் 2 லட்சம் கோடி நிதி புழங்கி தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐயின் முதன்மை பொருளாதார ஆலோசகர் செளம்ய கந்தி கோஷ்.
சி எல் எஸ் ஏ
நிர்மலா சீதாராமன் அறிவித்த 20.97 லட்சம் கோடி ரூபாயில் 1.77 லட்சம் கோடி தான், 2020 - 21 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது ஒட்டு மொத்த ஜிடிபியில் வெறும் 0.8 % தான். இந்த 0.8 %-ல் 0.34 % பணத்துக்கான திட்டங்கள் மட்டுமே புதியவைகள். மீதமுள்ள 0.46 % பணம் பழைய திட்டங்களில் இருந்து வருபவைகள் எனச் சொல்லி இருக்கிறது சி எல் எஸ் ஏ அமைப்பு.
நிதி புழக்கம் இல்லை
ஆக மொத்தத்தில், 5 நாட்களுக்கு நிதி அமைச்சர் வரிசையாகச் சொன்ன திட்டங்கள், பெரிய அளவில், நேரடியாக இந்திய பொருளாதாரத்தில் பணத்தை புழங்கச் செய்வதாக இல்லை, என சர்வதேச கம்பெனிகள் தொடங்கி உள்நாட்டு கம்பெனிகள் வரை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்ல இருக்கிறதோ தெரியவில்லை.