இந்திய மக்களை ஏற்கனவே கொரோனா வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது ஐடி நிறுவனங்கள் செலவின குறிப்பின் காரணமாகப் பல ஆயிரம் ஊழியர்களை இந்தியா முழுவதும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில் புதிய வர்த்தகம் கிடைத்து வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்பது நடக்காத காரியம் என்பதால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஊழியர்கள்
ஐடி நிறுவனங்கள் வர்த்தகம் தற்போது அதிகளவில் பாதித்துள்ள நிலையில், நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, flexi அல்லது அதிகளவிலான தற்காலிக ஊழியர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய வர்த்தகம் கிடைக்கும் வரையில் பழைய வர்த்தகத்தை இயல்பாக நடத்தவும், செலவுகளைக் குறைக்க முடியும் என்பது ஐடி நிறுவனங்களின் திட்டமாக உள்ளது.
மாற்றுத் திட்டம்
பொதுவாக ஐடி நிறுவனத்தின் வர்த்தகத்தில் பிரச்சனை என்றால் தற்காலிக ஊழியர்கள் அல்லது 3ஆம் தரப்பு நிறுவன ஊழியர்களைத் தான் பணிநீக்கம் செய்யும். ஆனால் தற்போது புதிய வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் செலவுகளைக் குறைக்க அதிகச் சம்பளம் வாங்கும் நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம்
ஐடி நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் திறன், வேலை செய்யும் ஆர்வம், வெளியேற்றத்தால் ஏற்படும் வர்த்தகப் பாதிப்பு, செலவு குறைப்பின் அளவு, ஆகியவை கணக்கிட்டுத் தான் நிர்வாகம் ஒருவரை பணிநீக்கம் செய்யும் எனக் கிரேஹவுண்டு ரிசர்ச் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைமை ஆய்வாளர் சான்சிட் விர் கோயா தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஊழியர்கள்
மந்தமான வர்த்தகம் மற்றும் கொரோனா பாதிப்பு நிறைந்துள்ள இந்தத் தருணத்தில் ஐடி நிறுவனங்கள் கண்டிப்பாகச் செலவுகளைக் குறைத்தாலும், வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். அந்த வகையில், தற்காலிக ஊழியர்கள் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.
தற்காலிக ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்தால் போதும், அதேபோல் அதிக நேரம் வேலை செய்யவும் தயங்கமாட்டார்கள் அல்லது குறித்த நேரத்தில் வேலையை முடித்துவிடுவார்கள். இதனால் நிறுவனங்களுக்குத் தான் லாபம் என் ரான்ஸ்டான் இந்தியா நிறுவனத்தின் உயர் தலைவர் யஷ்ஹாப் கிரி தெரிவித்துள்ளார்.
100இல் 12
இதன் மூலம் அடுத்த ஒரு வருடம் அதாவது 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் இந்திய ஐடி துறையில் 100 ஊழியர்களில் 12 பேர் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள் என Indian Staffing Federation (ISF) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 2021ஆம் ஆண்டின் மூடிவில் இந்திய ஐடி துறையில் மட்டும் சுமார் 7,20,000 பேர் தற்காலிக ஊழியர்களாக இருப்பார்கள்.
ISFயின் முக்கியத் தகவல்
Indian Staffing Federation கூறும் தகவல்கள் படி இந்தியாவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு துறையில் தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியைத் துவங்கியுள்ளது. இதன் உண்மையான எதிரொலி அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் தெரியும் என இவ்வமைப்பின் தலைவர் Rituparna Chakraborty திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப்
கடந்த ஒரு மாத காலத்திலேயே இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகச் சரிவைத் தாங்க முடியாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது கண் முன் தெரிகிறது.
இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிறது. கொரோனா-வின் இவ்விரு நாடுகளிலும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அடுத்த 6 மாதத்திற்கு ஐடி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்குத் தயாராகும் விதமாகவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் இறங்குகிறது.