இந்திய ஐடி துறையில் முக்கிய விவாத பொருளாக இருக்கும் மூன்லைட்டிங் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ள இதேவேளையில் ஊழியர்கள் அதிகளவில் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதாவது அட்ரிஷன் விகிதம் 28.4 சதவீதமாக உள்ளது. இதுவே விப்ரோ-வில் 23 சதவீதமாக, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 23.8 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது.
இவ்விரு பிரச்சனைகளையும் ஓரே நேரத்தில் சமாளிக்க இன்போசிஸ் முக்கிய முடிவை அறிவித்துள்ளது.
இன்போசிஸ்
இன்போசிஸ் தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது விப்ரோ மூன்லைட்டிங் செய்ய 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது போலவே இன்போசிஸ்-ம் ஓரே நேரத்தில் இரண்டு நிறுவனத்தின் பணியாற்றிய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது எனச் சிஇஓ சலில் பாரிக் தெரிவித்தார்.
ப்ரீலான்சிங் பணிகள்
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தற்போது அனைத்து ஊழியர்களுக்கும் கிக் வொர்க் அதாவது ப்ரீலான்சிங் பணிகளைச் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதாவது இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே வெளி நிறுவனத்தில் பணியாற்ற அனுமதி அளித்துள்ளது.
மூன்லைட்டிங்
மூன்லைட்டிங் இந்திய டெக் ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேளையில் இன்போசிஸ் பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. ஆனால் இன்போசிஸ் ஊழியர்கள் ப்ரீலான்சிங் பணிகளைச் செய்யும் முன் அவர்களது மேனேஜர் மற்றும் ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கண்டிஷனை வைத்துள்ளது இன்போசிஸ்.
ஒப்புதல் அவசியம்
மேனேஜர் மற்றும் ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதன் மூலம் இன்போசிஸ் ஊழியர் அதன் போட்டி நிறுவனங்களிடமோ அல்லது அதன் வாடிக்கையாளர்களிடமோ பணியாற்ற வில்லை என்பதை உறுதி செய்யப்படும்.
மேனேஜர் பிரிவு அதிகாரிகள்
இதுக்குறித்த இன்போசிஸ் நிர்வாகத்தின் மின்னஞ்சல் அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்படாமல் மேனேஜர் பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது. மேனேஜர் மற்றும் ஹெச்ஆர் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமல் ப்ரிலான்சிங் பணிகளை விதிமுறை மீறி செய்வதைக் கண்டறிந்தால் கட்டாயம் பணிநீக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது.
Accelerate தளம்
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் இதுப்போன்று கூடுதல் பணிகளைச் செய்ய விரும்புவோருக்காகவே Accelerate என்ற தளத்தை வைத்துள்ளது. இதில் யார் வேண்டுமானாலும், எந்தத் தொழில்நுட்பத்தில் வேண்டுமானாலும் பணியாற்ற முடியும், திறமை இருந்தால் மட்டும் போதுமானது. ஆனாலும் இன்போசிஸ் இந்த அனுமதியை தற்போது வழங்கியுள்ளது.
டிசிஎஸ், விப்ரோ, HCL
இன்போசிஸ் அறிவிப்பு அதன் சக போட்டி நிறுவனங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. டிசிஎஸ், விப்ரோ, HCL ஆகிய நிறுவனங்கள் முன்லைட்டிங்-கிற்கு எதிராக இருக்கும் வேளையில் இன்போசிஸ் கொடுத்திருக்கும் சலுகை ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
இன்போசிஸ் மூன்லைட்டிங் மற்றும் அதிகப்படியான அட்ரிஷன் விகித அளவுகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் தற்போது முன்லைட்டிங் ஏற்க துவங்கியுள்ளது, இதேபோல் சில நாட்களுக்கு முன்பு இன்போசிஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்குக் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கட்டாயம் இல்லை, தொடர்ந்து flexible approach நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக்.
மாற்றம்
இன்போசிஸ் அதன் சக போட்டி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, HCL ஆகியவற்றுக்கு எதிரான மூன்லைட்டிங் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் ஆகிய இரண்டு முக்கியமான விஷயத்தில் எதிராக முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம் டாப் 4 ஐடி நிறுவனங்கள் மத்தியில் இனி சலசலப்பு அதிகமாக இருக்கும்.