ரஷ்யா போலவே உலக நாடுகளின் தடை காரணமாகப் பெரிய அளவிலான வர்த்தகத்தை உலக நாடுகளில் இருந்து பெற முடியாத நிலையிலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் தனது பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது ஈரான்.
இந்தியா - ஈரான் மத்தியிலான வர்த்தக உறவு ஆரம்பம் முதல் சிறப்பாகவே இருக்கும் நிலையில், இந்தியா பல ஆண்டுகளாக ஈரான் நாட்டிடம் கச்சா எண்ணெய் முதல் அனைத்துப் பெட்ரோலியம் பொருட்களை வாங்கி வருகிறது.
இதேபோல் ஈரான் இந்தியாவிடம் உணவுப் பொருட்களை அதிகளவில் வாங்கி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா வர்த்தகத்தில் ஈரான் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து இரு முக்கியமான உணவு பொருட்களை வாங்குவதை ஈரான் நிறுத்தியுள்ளது.
ஈரான்
ஈரான் கடந்த வாரம் முதல் இந்தியா வர்த்தகர்களிடம் டீ மற்றும் பாஸ்மதி அரிசி வாங்குவதற்கான புதிய ஆர்டர்களை நிறுத்தியுள்ளது. இந்தத் திடீர் முடிவு ஏன் என்பதற்கான விளக்கத்தை ஈரான் பையர்கள், இந்திய விற்பனையாளர்களிடம் அளிக்கவில்லை.
ஹிஜாப் போராட்டம்
ஈரான் நாட்டில் மக்கள் தற்போது ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிமுறையை எதிர்த்து நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இதனால் ஈரான் நாட்டின் பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், சந்தைகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் வர்த்தகம் செய்ய ஏதுவான சூழ்நிலை இல்லாத காரணத்தால் புதிய ஆர்டர்களை இந்திய வர்த்தகர்களிடம் ஈரான் நாட்டினர் வைக்கவில்லை எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா - ஈரான் முக்கியப் பேச்சுவார்த்தை
மறுபுறம் இந்தியா - ரஷ்யா மத்தியில் ரூபாய் - ரூபிள் வாயிலான பணப்பரிமாற்றம் செய்வதைப் போல் இந்திய அரசும், ஈரான் அரசும் உள்நாட்டு நாணயத்தின் வாயிலாகப் பேமெண்ட் செய்யும் முயற்சியில் இறங்கு அதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.
புதிய ஆர்டர்கள்
இதனால் ஈரான் நாட்டில் இருந்து புதிய ஆர்டர்கள் வருவது குறைந்தது என்றும், விரைவில் இது இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது எப்படி இருந்தாலும் ஈரான் இறக்குமதியாளர்களின் முடிவுகள் மூலம் அந்நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
டீ மற்றும் பாஸ்மதி அரிசி
ஒரு வருடத்திற்கு இந்தியா ஈரான் நாட்டிற்குச் சுமாக் 30-35 மில்லியன் கிலோ டீ மற்றும் 1.5 மில்லியன் கிலோ பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்தியா ஈரான் நாட்டில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
கச்சா எண்ணெய்
சமீபத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்த நிலையில், இதற்கு முன்பு இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை ஈரான் நாட்டில் இருந்து தான் பூர்த்திச் செய்தது. இதனால் ஈரான் நாட்டின் மீது உலக நாடுகள் தடை விதித்தாலும் இந்தியா தொடர்ந்து அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து தான் வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட ஈரான் நாட்டில் இருந்து நேரடியாகக் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருட்களை வாங்கி வருகிறது. இந்த வர்த்தகத்திற்கான பணத்தை இந்தியா - ஈரான் தங்களது உள்நாட்டு நாணயங்களில் செய்யவே அதிகளவில் முயற்சிக்கிறது.