கொரோனா வைரஸால், பாதிக்கப்படாத நபர்கள் என யாராவது உண்டா..? தள்ளு வண்டியில் கடை நடத்துபவர்கள் தொடங்கி, பெரிய பெரிய ஐடி கம்பெனிகள் வரை எல்லோரும் கொரோனா வைரஸால் அடி வாங்கி தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது ஐடி நிறுவனங்களில் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது.
எப்போதும் ஐடியில் தலை தூக்கும் லே ஆஃப் பூதம் தான், இந்த முறையும் ஐடி ஊழியர்களை பயமுறுத்தத் தொடங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ்
உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் பரவி, மக்களின் உயிருக்கே பயத்தை ஏற்படுத்தி கொண்டு இருப்பதால், பல ஐடி நிறுவனங்களின் ப்ராஜெக்ட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ப்ராஜெக்ட்கள் ரத்து செய்யப்பட்ட்டு இருக்கின்றன. இதில் பெரிய ஐடி கம்பெனிகள் ஓரளவுக்காவது தாக்கு பிடித்துவிடும். ஆனால் சிறிய கம்பெனிகளுக்கு தான் சிக்கல் அதிகம்.
சிறிய ஐடி கம்பெனிகள்
முதலில், சிறிய ஐடி கம்பெனிகளுக்கு நிறுவனத்தை நடத்த போதுமான வருவாய் வராது. இதனால் கம்பெனியை செயல்பட வைக்க, சிறிய ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்க லே ஆஃப்-ஐ கையில் எடுத்து இருக்கின்றன சிறிய ஐடி கம்பெனிகள்.
இந்தியாவில் ஐடி
இந்தியாவில் சுமார் 45 - 50 லட்சம் பேர், ஐடி துறையில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் சுமார் 10 - 12 லட்சம் பேர் சிறிய ஐடி கம்பெனிகளில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சிறிய ஐடி கம்பெனிகளில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் தான், மேலே சொன்ன காரணங்களால், இப்போது லே ஆஃப் பூதத்துக்கு பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
ராஜினாமா பண்ணுங்க
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையைச் சுற்றி இருக்கும் பல நகரங்களில் ஐடி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. சமீபத்தில், புனே நகரத்தில் ஒரு சிறிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஏழு நபர்களை அழைத்து, திடீரென ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.
300 பேர்
ஃபேர் போர்டல் (Fareportal) என்கிற ஐடி சார்ந்த பிபிஓ (ITeS-BPO) நிறுவனம் குருகிராம் நகரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனம் பயணம் மற்றும் போக்குவரத்து துறையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தன் 300 ஊழியர்களை திடுதிப்பென ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார்களாம். இதை எல்லாம் விட கொடுமையான விஷயமும் நடந்து இருக்கிறது.
அரசு அதிகாரிக்கு கடிதம்
கொரோனா வைரஸால் சர சரவென கம்பெனிகள், தங்கள் ஊழியர்களுக்கு போதுமான முன் அறிவிப்பு காலம் (Notice Period) கொடுக்காமல் வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்களாம். இது குறித்து ஹரியானா மாநில தொழிலாளர் நலச் செயலருக்கு, ஐடி ஊழியர்கள் அமைப்பு (Forum of IT Employees) ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
120 நிமிடம் தான் அவகாசம்
அந்த கடிதத்தில், ஐடி கம்பெனிகள் வெறும் 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) தான் ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு கால அவகாசம் (Notice Period) கொடுத்து இருக்கிறார்கள். இந்த குறுகிய கால் கட்டத்துக்குள் ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி ஒரு சில மணி நேரங்களில் வேலையை விட்டுப் போகச் சொன்னால் ஊழியர்களின் குடும்பம் என்ன செய்வார்கள்..? இந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது..?
அரசு தரப்பு
கொரோனா இதுவரை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு, பயங்கர விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதை அரசுகளும் எதிர் கொள்கிறது. ஆனால் இப்படி திடீரென ஊழியர்கள், தங்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கான கடைசி புகலிடம் அரசு தான். நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.