இன்று இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி, சுவிட்சர்லாந்து வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்தை கணக்கில் காட்டாமல், 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்த வருமான வரித் துறை நோட்டீஸில், சுவிட்சர்லாந்தில் உள்ள 2 வங்கிக் கணக்குகளில் 814 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பா?
அந்த தொகைக்கு கடந்த 2012 - 13ம் ஆண்டு முதல் 2019 - 20ம் ஆண்டு வரையில், 420 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது. அந்த சுவிஸ் வங்கி தொடர்பான கணக்குகளை வருமான வரி கணக்கில் இருந்து அனில் அம்பானி வேண்டும் என்றே மறைத்துள்ளார். இதனால் அவர் மீது கறுப்பு பணம் மற்றும் வருமான வரி சட்டம் 2015ன் 50, 51வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும்.
சிறை தண்டனையா?
இந்த பிரச்சனை தொடர்பான அனில் அம்பானி ஆகஸ்ட் 31-க்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வரி ஏய்ப்பு உண்மை என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
பொருளாதார பங்களிப்பாளர்
அவருக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸின் படி, அனில் அம்பானி பஹாமாஸை தலைமையிடமாக கொண்ட டயமண்ட் டிரஸ்ட் மற்றும் நார்தென் அட்லாண்டிக் டிரேடிங் அன்லிமிடெட் நிறுவனங்களில் , பொருளாதார பங்காளிப்பாளராகவும், நன்மை பயக்கும் உரிமையாளராகவும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
டிரீம்வொர்க் ஹோல்டிங்க்ஸ்
இந்த விசாரணையில் டிரீம்வொர்க் ஹோல்டிங்க்ஸ் இன்க் என்ற நிறுவனத்தையும் டிபார்ட்மென்ட் கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனம் சுவிஸ் வங்கியிலும் கணக்கு வைத்துள்ளது. அதில் டிசம்பர் 31, 2007 நிலவரப்படி, 3.2 கோடி டாலர்கள் இருப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கான ஆரம்ப நிதியானது 2.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரஸ்ட் மூலம் நிதி
இதற்கான நிதி ஆதாரமானது அனில் அம்பானியின் தனிபட்ட கணக்கில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் இந்த டிரஸ்டினை தொடங்குவதற்கு அனில் அம்பானி தனது பாஸ்போர்ட்டினை கேஓய்சி ஆவணமாக வழங்கியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் பயனாளிகள் அவரது குடும்ப உறுப்பினர்களே என்பதும் தெரிய வந்துள்ளது.
சைப்ரஸ் வங்கியில் கணக்கு
2010ல் bvI நிறுவனம் சூரிச்சில் உள்ள சைப்ரஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. இதற்கான உரிமையாளரும் அனில் அம்பானி என்றும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் இதபோன்ற ஏராளமான பிரச்சனைகளை சுட்டிக் காட்டியுள்ள வருமான வரித்துறை ஆகஸ்ட் 31க்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.