இந்திய நிறுவனங்களில் வொர்க் ப்ரம் ஹோம் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
ஒருபக்கம் நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்து பணியாற்றக் கூறிவரும் நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால் நிறுவனங்கள் பல மாறுபட்ட முயற்சிகளிலும், சலுகைகள் உடனும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு சில பிரிவு ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் 100 சதவீதம் வொர்க் ப்ரம் ஹோம் மாடலில் இயங்க அனுமதி அளித்துள்ளது.
ஐடி பிரிவு ஊழியர்கள்
இந்தியா முழுவதும் இருக்கும் SEZ எனப்படும் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளில் இயங்கி வரும் நிறுவனங்களில் இருக்கும் ஐடி பிரிவு ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 2023 வரையில் முழுமையாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது என டிசம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறப்புப் பொருளாதாரப் பிரிவு
இந்த அறிக்கையில் சிறப்புப் பொருளாதாரப் பிரிவில் இருக்கும் ஐடி மற்றும் ஐடீஸ் நிறுவனங்கள், பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு டிசம்பர் 31, 2023 வரையில் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
அனுமதி
இந்த அறிவிப்பின் மூலம் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தோ அல்லது வேறு விருப்பம் உள்ள இடத்தில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க முடியும் என வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும்
இந்தச் சலுகை தற்காலிகமாகப் பணியில் இருக்கும் ஊழியர்கள், ஆப்சைட்-ல் இருக்கும் ஊழியர்கள், பயணத்தில் இருக்கும் ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் வர்த்தக அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் தற்போது பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
WFH சலுகை
இந்தியாவில் முன்னணி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வாரத்தில் 2 நாள் அல்லது 3 நாள் வந்தால் போதுமெனச் சலுகை கொடுத்து வரவழைத்துள்ளது, ஆனாலும் அதிகப்படியான ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்க மறுத்து வருகின்றனர்.
போக்குவரத்து தான் பெரும் பிரச்சனை
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் பெரு நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுக்கும் முக்கியமான காரணம் போக்குவரத்தும் நேரமும், போக்குவரத்து செலவுகளும் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
புதிய கட்டமைப்பு
இதையும் சரி செய்ய ஐடி நிறுவனங்கள் சில பெரு நகரங்களில் ஒரே இடத்தில் பெரிய அலுவலகத்தை வைத்து இயங்குவதை விடப் பல இடத்தில் சிறிய அலுவலகங்களை வைத்து இயங்குவது மூலம் இந்தப் பிரச்சனை எளிதாகக் களைய முடியும் என நம்புகிறது.
அக்சென்சர், Persistent Systems நிறுவனங்கள்
இதன் வாயிலாக அக்சென்சர், Persistent Systems ஆகியவை தற்போது பெங்களூர் போன்ற நகரங்களில் பெரிய அலுவலகத்தை வைத்திருந்தாலும், பல சிறிய அலுவலகத்தை அமைத்துள்ளது. Persistent Systems பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் தலா 3 சிறிய அலுவலகங்களை அமைத்துள்ளது.