ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று வந்துள்ளார்.
இந்தியா - ஜப்பான் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் நடப்புறவு இருக்கும் நிலையில் அதனை மேலும் சிறப்பாக்க ஃபுமியோ கிஷிடா மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.
ஃபுமியோ கிஷிடா
ஃபுமியோ கிஷிடா-வின் இந்திய சந்திப்பில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், பல முக்கியமான விஷயங்கள் இரு தலைவர்களும் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் சுமார் 5 டிரில்லியன் யென் (42 பில்லியன் டாலர்) அளவிலான தொகையை முதலீடு செய்யும் திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
1455 ஜப்பான் நிறுவனங்கள்
இந்தியாவில் தற்போது 1455 ஜப்பான் நிறுவனங்கள் உள்ளன, இதோடு 11 ஜப்பான் தொழில்துறை நகரங்கள் (JIT) நிறுவப்பட்டுள்ளன, இதில் ராஜஸ்தானில் உள்ள நீம்ரானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி ஆகியவற்றில் ஜப்பானிய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
முக்கியத் திட்டங்கள்
ஜப்பான் இந்தியாவின் 5 வது பெரிய அன்னிய முதலீட்டு ஆதாரமாகவும் உள்ளது, நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. மேலும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை, பிரத்யேக சரக்கு வழித்தடம், மெட்ரோ திட்டங்கள் மற்றும் டெல்லி-மும்பை தொழில்துறை தாழ்வாரத் திட்டம் உட்பட ஜப்பானின் உதவியுடன் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் தற்போது இந்தியாவில் இயங்கி வருகிறது.
14வது உச்சி மாநாடு
மேலும் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டின் போது பொது-தனியார் நிதியுதவி திட்டத்தைக் கிஷிடா அறிவிக்க வாய்ப்புள்ளதாக. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உச்சி மாநாடு மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் இந்திய மற்றும் ஜப்பானிய பிரதமர்களுக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
300 பில்லியன் யென் கடன்
இதோடு இந்த இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் போது, ஜப்பானியப் பிரதமர், நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது சுமார் 300 பில்லியன் யென் கடனுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷின்சோ அபே
கிஷிடாவின் 5 டிரில்லியன் யென் முதலீடு ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2014 இல் இந்திய பயணத்தின் போது அவர் உறுதியளித்த 3.5 டிரில்லியன் யென் முதலீட்டை விட அதிகமான தொகையாக உள்ளது.