கொரோனா 2வது அலையில் மத்திய அரசு கடந்த முறை போன்று நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்காமல் ஊரடங்கு விதிக்கும் உரிமையை முழுமையாக மாநில அரசுக்குக் கொடுத்தது. 2வது கொரோனா அலையில் மத்திய அரசு எடுத்த மிகவும் சிறப்பான முடிவு எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் உண்டு, 2020ல் ஏற்பட்ட முதல் கொரோனா அலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் விதித்த நிலையில் பல கோடி மக்கள் திடீரென வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்திற்கே தடுமாறினார்.
ஆனால் தற்போது வாழ்வாதாரத்திற்குத் தடுமாறவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.
கொரோனா 2வது அலை தொற்று
கொரோனா முதல் தொற்று அலையில் பெரு நகரங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டது, ஆனால் 2வது அலையில் நாட்டின் ஒவ்வொரு சிறு, குறு கிராமங்கள் வரையில் பெரிய அளவிலான தொற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மக்கள் மத்தியில் பயம்
இதன் மூலம் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, இந்தப் பயம் நாட்டின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. பொதுவாக மக்கள் அதிகமான பொருட்களை வாங்கும் போதும், அதிகளவிலான பயணங்கள் மேற்கொள்ளும் போது தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
லோக்கல் லாக்டவுன்
தற்போது லோக்கல் லாக்டவுன் விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் பல தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகள் உடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகிறது, இதனால் மக்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்று தினமும் வருமானம் பெற்று வருகின்றனர். பல மாநிலங்கள் மக்களுக்கு அதிகளவிலான உதவிகளையும் செய்து வருகிறது.
மக்களின் நுகர்வு அளவீடு
ஆனாலும் மக்கள் மத்தியில் நுகர்வு அளவீடு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக ரீடைல் மற்றும் ரெக்கிரேயஷன் துறை பிப் 15ஆம் தேதி வாரத்தில் -21.9 சதவீதமாக இருந்த நிலையில் மே 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் -65.3 சதவீதமாகக் குறைந்துள்ளது எனக் கூகுள் மொமிலிட்டி தரவுகள் கூறுகிறது.
டோல் கட்டண வசூல் சரிவு
இதே இடைப்பட்ட காலத்தில் டோல் கட்டண வசூல் 4.1 சதவீத வளர்ச்சியில் இருந்து -18.7 சதவீதமாகச் சரிந்துள்ளது, மின்சாரம் 0.1 சதவீதத்தில் இருந்து -4.5 சதவீதம், ரயில்வே சரக்கு போக்குவரத்து -1.2 சதவீதம் முதல் 1.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு
அனைத்திலும் முக்கியமாக மத்திய அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பெரிய அளவிலான வருமானம் பெறும் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு என்று பிப் 15ஆம் தேதி வாரத்தில் 3.1 சதவீதமாக இருந்த நிலையில் மே 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் -14 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நுகர்வு சந்தையில் தொடர் சரிவு
இப்படி ஒவ்வொரு முக்கியமான நுகர்வு சந்தையிலும் மக்களின் நுகர்வு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனா ஏற்படுத்திய பயம் தான் என்றால் மிகையில்லை. இதன் மூலம் கொரோனா தொற்றுக் குறைந்தாலும் மக்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர சில காலம் தேவைப்படும்.