ஜால்னா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்னா மாவட்டத்தை சேர்ந்த பேருந்து ஒன்றில், போதிய வசதிகள் செய்யாமலேயே அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேருந்தில் அனைத்து வசதிகளும் நல்ல முறையில் இருப்பதாக, விளம்பரப்படுத்திய போதிலும், அந்த பேருந்தில் ஏசியும் செயல்படவில்லை. மொபைல் சார்ஜிங் பாயிண்ட் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாலைப் போக்குவரத்து கழகத்தின் சிவ்ஷாகி என்ற பேருந்தில் தான் இந்த பிரச்சனை அரங்கேறியுள்ளது.
ஏசி பேருந்தில் போதிய வசதிகள் இல்லை
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சதீஷ் ரத்தன்லால் தயாமா இது குறித்து கூறுகையில், அவர் அவரது நண்பருடன் மஹாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தின் சிவ்ஷாகி பேருந்தில், அங்குள்ள ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து அவுரங்காபாத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததால் கண்டக்டரிடம் சார்ஜிங் பாயிண்ட்டை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லாத நிலையில் அந்த பேருந்தில் அப்படி ஏதும் வசதி இல்லை என தெரிய வந்துள்ளது.
பெயரளவிற்கு சொகுசு பேருந்து
ஆனால் அவருக்கு அப்போது தான் தெரிந்திருக்கிறது. அவர் ஏமாந்து விட்டார் என்று. ஏனெனில் அவர் பயணம் செய்த பேருந்தில் பெயரளவிற்கு தான் சொகுசு பேருந்து. அங்கு ஏசியும் கிடையாது. மொபைல் சார்ஜிங்கும் கிடையாது என்று தெரிந்துள்ளது. இதை அறிந்த பின்னர் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் புகார் பதிவைப் பெறுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்களே அதை வழங்க மறுத்துள்ளனர்.
இழப்பீடு வேண்டும்
இதனால் கடுப்பான சதிஷ் தான் எதிர்கொண்ட சிரமத்திற்கும், மன வேதனைக்கும் இழப்பீடு கோரி நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் அரசு பேருந்தில் ஏசி வசதியும் மொபைல் சார்ஜ் வசதியும் இருப்பதாக பொய்யான விளம்பரத்தை, விளம்பரப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பேருந்தில் இந்த வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலித்ததாகவும் சதிஷ் தெரிவித்துள்ளார். இரண்டு வசதிகள் செயலிழந்த போதிலும், அவர்கள் அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
30 நாட்களுக்குள் இழப்பீடு தர வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த பின்னர் நுகர்வோர் மன்ற தலைவர் நீலிமா சாண்ட் மற்றும் உறுப்பினர்கள் நீதா கங்கரியா மற்றும் மஞ்சுஷா சிட்லாங்க்கே ஆகியோர் கடந்த வாரம் விசாரித்த பின்னர், சதிஷூக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தீர்ப்பளித்தனர். அதுவும் அதை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். நீங்க நினைக்கிறது தெரியுது.. தமிழ்நாட்டுக்கு அவர் இப்போதைக்கு வராமல் இருப்பது நல்லது என்று.