மும்பை: நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை ஒருவரே வகிக்கக் கூடாது. தனித் தனியாக பிரிக்க வேண்டும் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த ஆண்டே அறிவித்துள்ளது.
இதன்படி இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை பிரிக்க வேண்டும். இரு பதவிகளில் தனித்தனி நபர்களை நியமிக்க வேண்டும். இது 2020, ஏப்ரல் 1-க்குள் இந்த விதிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் செபி தெரிவித்திருந்தது.
மேலும் ஒருவர், எட்டு நிறுவனங்களுக்கு மேல் இயக்குனர் பதவி வகிக்கவோ அல்லது தனி இயக்குனராகவோ செயல்படக் கூடாது என்றும், இது தவிர இன்னும் பல புதிய விதிமுறைகளை அறிவுறுத்தியது.
புதிய தலைவர்
இவ்வாறாக பல விதிமுறைகளை செபி அறிவித்திருந்தது. இதன் படி இந்த புதிய விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ல் இருந்து அமலாகும் என்றும் அறிவித்திருந்தது. செபியின் இந்த விதிகளின் படி, புதிய நிர்வாக இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறாராம் முகேஷ் அம்பானி. அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் மதிப்புமிக்க முதன்மை நிறுவனத்திற்கு சரியான தலைவர் கிடைப்பது என்றால் சும்மாவா?
நிர்வாகமற்ற பதவியை வகிப்பார்
மேலும் தலைமை செயல் அதிகாரி பதவிக்காக குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆதாரங்களின் படி முகேஷ் அம்பானி தனது நிர்வாக அதிகாரி பதவியை அடுத்து, தனது நிறுவனத்தின் நிர்வாகமற்ற பதவியை வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
மூத்த அதிகாரிகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம்
முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் மிகத் திறமையுள்ள பல மூத்த நிர்வாகிகள் உள்ளனர். ஆக அந்த மூத்த நிர்வாகிகளில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானிக்கு வயதும் திறனும் இருந்தாலும், அதனை ஏற்க சட்டம் மறுக்கிறது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினரும் இந்த பதவியை வகிக்க முடியாது என்பதால், யார் வருவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய விதிமுறைகள்
புதிய விதிகளின் படி வாரியத்தின் தலைவர் ஒரு நிர்வாகமற்ற தலைவராக இருக்க வேண்டும். மற்றும் நிர்வாக இயக்குனர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரியுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. உதய் கோட்டக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை செபி அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவகாசம் நீட்டிக்கப்படுமா?
ஏற்கனவே புதிய விதிமுறைளை நடைமுறைப்படுத்த ஒரு வருடம் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது சந்தேகம் தான். செபி இந்த விதிமுறைகளை அறிவித்து சுமார் 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் குறைந்த மாதங்களே உள்ளன. ஆக அதற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாலும், பெரு நிறுவனங்களின் முக்கிய பாத்திரங்களை பிரிப்பது மிக கடினம் என்றும் தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உட்கட்சி பிளவு
தற்போது 62 வயதாகும் முகேஷ் அம்பானி 1977 முதல் ரிலையன்ஸ் குழுவில் பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 2002ல் அவரின் தந்தை திருபாய் அம்பானி இறந்த பின்னர் நிர்வாக தலைவராகவும், தலைவராகவும் உயர்த்தப்பட்டார். அந்த நேரத்தில் அவரது தம்பி அனில் அம்பானி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த ஆசை நெடுநாள் நீடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.