தற்போது சமூக வலைதளங்களில் மருத்துவம், கல்வி, சட்டம் உள்பட பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் வீடியோக்களை பதிவு செய்துவருகின்றனர்.
இந்த தலைப்புகளில் அவர்களுக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கும் என்று தெரியாமல் அதனை பின்பற்றும் வழக்கம் உடையவர்களும் அதிகமாக இருக்கின்றனர்.
இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலைத்தள வீடியோ
சமூக வலைதளங்களை திறந்தாலே எங்கு பார்த்தாலும் சடடம், நீதி, நிதி, மருத்துவம், கல்வி போன்ற ஆலோசனை கூறும் வீடியோக்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த வீடியோக்களை பதிவு செய்பவர்கள் அந்த துறையில் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியாமல் அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் பழக்கம் உடையவர்களும் அதிகரித்து வருகிறது என்பதும், இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ வீடியோ
குறிப்பாக மருத்துவம் சார்ந்த குறிப்புகளை கூறுபவர்கள் அந்த துறையில் பயிற்சி பெற்றவர்களாக இல்லாமல் இருந்தால், அவர்கள் கூறுவதை பின்பற்றுபவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
சீன அரசின் கடிவாளம்
இந்த நிலையில் இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வர கடிவாளம் அமைக்க சீனா தற்போது புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி சமூக வலைதளங்களில் நிதி, மருத்துவம், சட்டம், கல்வி போன்ற தலைப்புகளில் வீடியோ பதிவு செய்பவர்கள் அதற்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச அறிவுரை
சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இலவச அறிவுரை கூறும் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தால் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் பதிவு செய்யப்படும் இந்த வீடியோக்கள் தரமானவையா? தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் இருந்து வருகிறதா என்பதை கண்காணிக்க பல நாடுகள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஏமாற்றும் நெட்டிசன்கள்
குறிப்பாக சமூக வலைதள நிர்வாகிகளும் இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மில்லியன்கணக்கான லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை பெறுவதற்காக தாங்கள் சில குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்கள் என ஏமாற்றும் நெட்டிசன்களுக்கு இது ஒரு சரியான கடிவாளமாக இருக்கும்.
கட்டுப்பாடுகள்
எந்தவித தகுதியும் இல்லாமல் ஒரு தலைப்பில் உரையாடுவதால் ஏற்படும் விளைவுகளை கணக்கில் கொண்டே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என சீன அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. சீன அரசாங்கத்தை தொடர்ந்து அனைத்து நாடுகளும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இந்திய அரசு
இந்திய அரசும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை கண்காணித்து வருகிறது என்றும், விரைவில் சீனா போல் இந்திய அரசிடம் இருந்தும் இதுபோன்ற ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.