ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி, விலைவாசி ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக விளங்குவது எரிபொருள் விலை தான்.
தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
லாக்டவுன் கொரோனா தொற்றுக்குப் பின்பு கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் இதன் விலை மளமளவென உயர்ந்து தற்போது 75 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத உச்சம்
இதன் எதிரொலி இந்தியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. குறிப்பாக மும்பை, ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 33 டாலர் அதாவது 85 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரி முதலில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க என்ன காரணம்..?!
டிமாண்ட் மற்றும் உற்பத்தி அளவீடு
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது உலகம் முழுவதும் வர்த்தகம், போக்குவரத்து என அனைத்தும் முடங்கியது. இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் தேவை என்பது பெரிய அளவில் குறைந்தது. ஒரு பொருளின் விலை அதன் டிமாண்ட் மற்றும் உற்பத்தி அளவீட்டை பொருத்தே அமையும்.
OPEC நாடுகள்
இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துச் செயற்கையாகக் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியது. தற்போது உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ள வேளையில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல் அப்படியே வைத்துள்ள காரணத்தால் டிமாண்ட் அதிகமாகி சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் விலை விலை உயர்வு.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலையில் இருந்து மீண்டு வரும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஜூன் முதல் வாரத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமானது மூலம் இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் டாலர் இருப்பு
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை அதிகளவில் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வரும் நிலையில், அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் போது இந்தியாவின் டாலர் இருப்பு குறையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கும், ரூபாய் மதிப்பு சரியும்..
சமையல் எரிவாயு விலை
இதேவேளையில் இந்தியாவில் சமையல் எரிவாயு விலை கடந்த ஒரு வருடத்தில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டர் விலை 216 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாகச் சமையல் எரிவாயுவில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதீத வரி
இந்தியாவின் ரீடைல் எரிபொருள் விலையில் பெரும் பகுதி வரியாகவே செலுத்தப்படுகிறது. பெட்ரோல் ரீடைல் விலையில் 57 முதல் 60 சதவீதம் வரி மட்டுமே, இதேபோல் டீசல் விலையில் 51 முதல் 55 சதவீதம் வரியாகவே மக்கள் செலுத்துகின்றனர். இது மக்களுக்குப் பெரும் சுமை.
பணவீக்கம் அதிகரிப்பு
அதீத எரிபொருள் விலையின் காரணமாக மே மாதம் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.3 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாகவும் உள்ளது. நுகர்வோர் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு நாட்டின் வர்த்தகம் கடுமையாகப் பாதித்துள்ளது.
பிரதமர் மோடி
அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கப்படுவதால் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிக்கும். இது நாட்டின் நிதி நிலையைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் அரசின் கடன் அளவையும் பாதிக்கும். இதை எல்லாம் எப்படிப் பிரதமர் மோடி சமாளிக்கப்போகிறார் என்பது தான் தற்போதைய கேள்வி.