சமீபத்திய காலமாக ரியல் எஸ்டேட் சந்தையானது மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு விற்பனை களைகட்டியுள்ளது எனலாம்.
மும்பை முனிசிபல் பகுதியில் சொத்து பதிவுகள் இந்த மாதம் 20% அதிகரித்து, 8100 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பதிவு வளர்ச்சியானது 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எனினும் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 28% சரிவினைக் கண்டுள்ளது என நைட் பிராங்க் தரவானது சுட்டிக் காட்டியுள்ளது.
பதிவு அதிகரிப்பு
இதே மும்பையில் பிஎம்சி பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 8149 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இதன் மூலம் இம்மாநிலத்தின் வருவாய் விகிதம் 620 கோடி ரூபாயினை தாண்டியுள்ளதாகவும் நைட் பிராங்க் தரவு சுட்டி காட்டியுள்ளது.
கடந்த ஜுலை மாதம் 11, 340 சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தசாப்தத்தில் சிறந்தது
இந்த தசாப்தத்திலேயே ஆகஸ்ட் 2022 சிறந்த மாதமாக இருந்தது என கூறும் தரவுகள், ஆகஸ்ட் 2022ல் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான பதிவுகளில் 85% குடியிருப்புகளாகும். 9% வணிக ரீதியான சொத்துகளாகவும் உள்ளன.
இளம் வயதினர் அதிகம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஆகஸ்ட் 2022ல் வீடு வாங்குபவர்களின் மிகப்பெரிய பங்கு 31 - 45 வயதுடையவர்களாக உள்ளது. இவர்களின் பங்கு மொத்த சொத்து வாங்கியதில் 47% பங்கினை கொண்டுள்ளது. இதே 46 - 60 வயதுடையவர்களின் பங்கு 32% ஆகும். 12% வீடு வாங்குபவர்கள் 30 வயதுக்கு கீழானவர்களாகும். 9% பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நைட் பிராங்க் தெரிவித்துள்ளது.
விலை நிலவரம் எப்படி?
மேற்கண்ட சொத்து பதிவில் 1 - 2.5 கோடி பிரிவில் உள்ள சொத்துகள் 45% பங்களித்துள்ளன. 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு குறைவான பதிவுகள் 40% பங்கு வகித்துள்ளன. 2.5 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான சொத்துகளில் 11% பங்கும் வகித்துள்ளது.
மற்ற நகரங்களிலும் அதிகரிப்பு
ரெப்போ விகிதம் 140 புள்ளிகள் அதிகரிப்பால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, ஸ்டாம்ப் டியூட்டி ஆகியவை காரணமாக வீடு விற்பனை சரிவினைக் கண்டுள்ளது.
மும்பை பகுதிகளில் மட்டும் அல்ல, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைத்ரபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களிலும் வீடு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளன என்பதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நகரங்களுக்கு பணிக்காக திரும்பிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு மத்தியில், வீடு விற்பனை கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
சென்னை நிலவரம் என்ன?
1.5 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான வீடு விற்பனையான நிலையானதாக உள்ளது. தற்போது தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தொற்று நோய்க்கு பிறகு மக்களின் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. வீட்டில் இருந்து பணி, ஹைபிரிட் பணி உள்ளிட்டவை வீடுகளின் தேவையினை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரிய வீடுகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
சொகுசு வீடு விற்பனை அதிகரிப்பு
குறிப்பாக சொகுசு வீடுகளின் விற்பனையானது கடந்த 2019ஐ காட்டிலும், நடப்பு ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் , நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளும் வீடு விற்பனையை ஊக்குவித்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.