தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநிலத்தின் பொருளாதாரம், வர்த்தகம், வருவாய், நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் வருவதன் விளைவாகத் தமிழ்நாட்டின் பல பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரிசர்வ் வங்கி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டரில் மட்டும் அல்லாமல் தன்னுடைய பர்சனல் பிளாக்-ல் விளக்கமாகப் பதிவிட்டு உள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிதியாண்டு 21-22 இல் 8.7% ஆகவும், நான்காவது காலாண்டில் 4.1% ஆகவும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும், தேக்கநிலை குறித்த அச்சம் தேவையில்லை என்றும் கூறுகிறது, இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த வளர்ச்சி என்பது கடந்த ஆண்டு நிலவிய எதிர்மறை வளர்ச்சியுடன் தொடர்புடையது. அந்த அடிப்படியில் கணக்கிட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலையைக்கூட இன்னும் நாம் எட்டவில்லை. எனவே என் கருத்துப்படி இதில் பெரிதாய் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை..
பணவீக்கம்
வட்டி விகித உயர்வுகளுக்குப் பிறகும் பணவீக்கம் ரிசர்வ் வங்கி வரையறையான 4% - 6% க்கு மேல் தொடர்கிறது என்ற கேள்விக்குத் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பணவியல் கொள்கையின் முதன்மையான பணியாகும், ஆனால் ரிசர்வ் வங்கியால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், ரூபாயின் மதிப்பைப் பாதுகாப்பதற்கும், அரசாங்கத்திற்கு ஈவுத்தொகையை வழங்குவதற்கும் தங்களைப் பொறுப்பாளிகளாகக் கருதி தங்களது நெறிகளை அவர்களே நீர்த்துப்போகச் செய்தனர் எனப் பதில் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இந்திய அரசு தனது கடன் திறன் மற்றும் நாட்டின் முதலீட்டுத் தர மதிப்பீட்டின் வரம்புகளை ஏற்கனவே மீறி வருகிறது என்றாலும், நிதிக் கொள்கையைச் சரியான முறையில் கையாள வேண்டும் என அரசின் அங்கமாக இல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு எது சரியோ அதைச் செய்ய வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 26 பில்லியன் டாலர்களை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இது இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.4% லிருந்து 6.8% ஆக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி இழப்பீடு கால வரையறையை நீட்டிக்கக் கோரிக்கை வைப்பது சரியா என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஜிஎஸ்டி செஸ்
மாநிலங்கள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யாமல் ஒன்றிய அரசின்மீது மேலும் சுமையை ஏற்றினால் , அது பெரும் பிரச்சனையாக உருவாகும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெரியும், இந்த இழப்பீட்டிற்கான நிதியில் பெரும்பகுதி அல்லது முழுவதுமே ஜிஎஸ்டி செஸ் மூலமாகவே திரட்டப்படுகிறது.
இரண்டு காரணங்கள்
நான் ஒன்றிய நிதியமைச்சரின் இடத்தில் இருந்தால், இரண்டு காரணங்களுக்காகக் குறுகிய கால அளவிலான நீட்டிப்பைப் பரிசீலிப்பேன் - அதில் ஒன்று ஜிஎஸ்டி வருவாயில் நாம் பெரும் ஏற்றதைப் பெற வேண்டும், இரண்டாவதாக நிகழ்வுகள் சரியான முறையில் நடந்தால், முந்தைய பணவீக்கத்தின் தாக்கம் குறைவது மாநிலங்களுக்கு உதவக்கூடும்.