அண்ணன் என்ன டா தம்பி என்ன டா அவசரமான உலகத்திலே... யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி சகோதரர்களுக்குப் பொருந்தும்.
அண்ணன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால் தம்பியோ, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட வெளியேறி விடுவாரோ..? என்கிற நிலையில் இருக்கிறார்.
அப்படிப்பட்ட தம்பிக்கு இப்போது ஒரு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது. வாருங்கள் அந்த நல்ல விஷயத்தை விரிவாகப் பார்ப்போம்.
ஒப்பந்தம்
கடந்த 2007-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், 600 மெகா வாட் கணக்கில், இரண்டு அனல் மின் நிலைய திட்டத்தை கட்டி முடிக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு அனல் மின் நிலையங்களில் ஒன்று 35 மாதங்களிலும், இரண்டாவது அனல் மின் நிலையத்தை 38 மாதங்களிலும் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு இருந்தது.
அனல் மின் நிலையம்
ஆனால், அனல் மின் நிலையத்தைக் கட்டிக் கொடுக்கத் தேவையான நிலங்கள், ரிலையன்ஸ் இன்ஃபாஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு சரியான நேரத்தில் ஒதுக்கப்படவில்லை. ஒருவழியாக போராடி கடந்த மே 2015-ல் ஒரு அனல் மின் நிலையத்தையும், கடந்த பிப்ரவரி 2016-ல் இரண்டாவது அனல் மின் நிலையத்தையும் கட்டி முடித்தது ரிலையன்ஸ் இன்ஃப்ரா.
ரிலையன்ஸ் தரப்பு
குறித்த நேரத்தில் நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்காதது தொடங்கி, தன் தரப்பில் Damodar Valley Corporation (DVC)மீது குற்றம் சாட்டினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் Damodar Valley Corporation (DVC)-ம் ரிலையன்ஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டினார்கள். வழக்கு இரண்டு வருடம் பஞ்சாயத்தில் இருந்து, இப்போது தான் முடிவுக்கு வந்து இருக்கிறது.
தீர்ப்பு
இரண்டு நிறுவனத்துக்கும் இடையில் நடந்த பஞ்சாயத்தில், Damodar Valley Corporation (DVC) அமைப்பு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என arbitration tribunal தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த arbitration tribunal என்பது இரண்டு தரப்பினர்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் ஒரு வித சட்ட அமைப்பு.
மகிழ்ச்சி
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு இந்த 1,250 கோடி ரூபாய் ஆர்பிட்ரேஷன் தீர்ப்பு உண்மையாகவே ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும் எனலாம். இத்தனை நாள் மற்றவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அனில் அம்பானிக்கு திடீரென மற்றவர்களிடம் இருந்து தனக்கு பணம் வரும் என்றால் மகிழத் தானே செய்வார்.
ரிலையன்ஸ் தரப்பு
இந்த ஆர்பிட்ரேஷன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால், கார்ப்பரேட் கம்பெனிகளின் உரிமை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய பொறியியல் மற்றும் கட்டுமான கம்பெனிகளுக்கான பாக்கி தொகைகள் முறையாக குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்பட வேண்டும். அப்போது மேற்கொண்டு பெரிய கட்டுமானப் பணிகளில் நிம்மதியாக பணியாற்ற முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ரிலையன்ஸ் தரப்பினர்கள்.
கடன் தான்
சரி, இப்போது கிடைக்க இருக்கும், இந்த 1,250 கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு, வழக்கம் போல, அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு இருக்கும் கடனை அடைக்க பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களாம். சில மாதங்களுக்கு முன்பே அனில் அம்பானியின் நிறுவனங்கள், வரும் 2020-க்குள் கடன் இல்லா நிறுவனங்களாக மாறும் வேலையில் ஈடுபட்டு இருப்பதாகச் சொன்னது குறிப்பிடத்தக்கது.